x

71. குறிப்பறிதல்

PREV    NEXT

குறள் 701:

கூறாமை நோக்கிக் குறிப்பறிவான் எஞ்ஞான்றும்
மாறாநீர் வையக் கணி


விளக்கம்:
ஓருவர் சொல்லாமலே அவறுடைய முகத்தை நோக்கி அவர் கருதிய குறிப்பை அறிகின்றவன் எப்போதும் உலகத்திற்க்கு ஓர் அணிகலன் ஆவான்.

குறள் 702:

ஐயப் படாஅ தகத்த துணர்வானைத்
தெய்வத்தோ டொப்பக் கொளல்

விளக்கம்:
ஐயப்படாமல் மனத்தில் உள்ளதை உணரவல்லவனை (அவன் மனிதனே ஆனாலும்) தெய்வத் தோடு ஒப்பாக கொள்ள வேண்டும்.

குறள் 703:

குறிப்பிற் குறிப்புணர் வாரை உறுப்பினுள்
யாது கொடுத்துங் கொளல்

விளக்கம்:
(முகம் கண் இவற்றின்) குறிப்புக்களால் உள்ள குறிப்பை உணர வல்லவரை நாட்டின் உறுப்புக்களுள் எதைக் கொடுத்தாவது துணையாக பெற்றுக்கொள்ள வேண்டும்.

குறள் 704:

குறித்தது கூறாமைக் கொள்வாரோ டேனை
உறுப்போ ரனையரால் வேறு

விளக்கம்:
ஒருவன் மனதில் கருதியதை அவன் கூறாமலே அறிந்து கொள்ள வல்லவரோடு மற்றவர் உறுப்பால் ஒத்தவராக இருந்தாலும் அறிவால் வேறுபட்டவர் ஆவார்.

குறள் 705:

குறிப்பிற் குறிப்புணரா வாயின் உறுப்பினுள்
என்ன பயத்தவோ கண்

விளக்கம்:
(முகம் கண் இவற்றின்) குறிப்புக்களால் உள்ளக்குறிப்பை உணராவிட்டால், ஒருவனுடைய உறுப்புகளுள் கண்கள் என்னப் பயன்படும்.

குறள் 706:

அடுத்தது காட்டும் பளிங்குபோல் நெஞ்சம்
கடுத்தது காட்டும் முகம்


விளக்கம்:
தன்னை அடுத்தப் பொருளைத் தன்னிடம் காட்டும் பளிங்கு போல், ஒருவனுடைய நெஞ்சில் மிகுந்துள்ளதை அவனுடைய முகம் காட்டும்.

குறள் 707:

முகத்தின் முதுக்குறைந்த துண்டோ உவப்பினும்
காயினும் தான்முந் துறும்

விளக்கம்:
ஒருவன் விருப்பம் கொண்டாலும், வெறுப்புக் கொண்டாலும் அவனுடைய முகம் முற்ப்பட்டு அதைத் தெரிவிக்கும், அம் முகத்தைவிட அறிவு மிக்கது உண்டோ.

குறள் 708:

முகநோக்கி நிற்க அமையும் அகநோக்கி
உற்ற துணர்வார்ப் பெறின்

விளக்கம்:
உள்ளக் குறிப்பை நோக்கி உற்றதை உணரவல்லவரைப் பெற்றால், (அவரிடம் எதையும் கூறாமல்) அவறுடைய முகத்தை நோக்கி நின்றால் போதும்.

குறள் 709:

பகைமையும் கேண்மையும் கண்ணுரைக்கும் கண்ணின்
வகைமை உணர்வார்ப் பெறின்

விளக்கம்:
கண்பார்வையின் வேறுபாடுகளை உணரவல்லவரைப் பெற்றால்( ஒருவனுடைய மனதில் உள்ள) கையையும் நட்பையும் அவனுடைய கண்களே சொல்லி விடும்.

குறள் 710:

நுண்ணியம் என்பார் அளக்குங்கோல் காணுங்காற்
கண்ணல்ல தில்லை பிற

விளக்கம்:
யாம் நுட்பமான அறிவுடையேம் என்று பிறர் கருத்தை அறிபவரின் அளக்குங்கோல், ஆராய்ந்து பார்த்தால் அவனுடையக் கண்களே அல்லாமல் வேறு இல்லை.

PREV    NEXT



Like it? Please Spread the word!