x

மே 27 : கடவுள் வணக்கம்

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.


கடவுள் வணக்கம் :

“எல்லாம் வல்ல பரம்பொருள் (Providence) எனக்கு வேண்டியதை எல்லாம் உரிய காலத்தில் கிடைக்குமாறு வைத்திருக்கும் பொழுது அந்தப் பரம் பொருள் இந்த இயற்கையாக, பிரபஞ்சமாக, உலகமாக, மக்களாக எனக்கு உரியவர்களாக, என்னுடைய அறிவாக இருந்து கொண்டு எல்லாவற்றையும் அளித்துக் கொண்டே இருக்கிற போது நான் எதற்காக இது இல்லை, அது இல்லை என்று குறைபட்டுக் கொள்ள வேண்டும், பிச்சை எடுக்க வேண்டும்?. செய்ய வேண்டியதை மனம் கோணாமல் செய்துவிட்டு கவலைப்படாமல், பிறரை நொந்து கொள்ளாமல் இரு. உனக்கு முரண்பட்டவர்கள் யாரேனும் இருப்பின் அவர்களை வாழ்த்திக் கொண்டே இரு. உன்னை வாழ்த்திக் கொள். உன் குடும்பத்தை வாழ்த்து. சுற்றத்தாரை வாழ்த்து, சமுதாயத்தை வாழ்த்து.

மன அமைதியைப் பேணும் வகையில் தியானம், சிந்தனை, அகத்தாய்வு இவற்றில் தொடர்ந்து ஈடுபடு. உடற்பயிற்சியை நன்கு செய்து வா. இவ்வாறு தொடர்ந்து ஒட்டுமொத்தமான வாழ்க்கைப் பயிற்சியை கைக்கொண்டால் வேறு எந்த ஞானமும் வேண்டாம். இன்னும் ஒரு கடவுளும் வேண்டாம். ஏனென்றால் எந்தச் செயல் செய்தாலும் அங்கே விளைவு கடவுள் செயல்தான். (That is the cause and effect system) அது இயற்கையினுடைய விளைவு தான். நீ செய்யும் செயலுக்குத் தக்கவாறு, பொருளுக்குத் தக்கவாறு உனக்கு இன்பமோ, துன்பமோ, வெகுமதியாகவும் தண்டனையாகவும் கொடுத்துக் கொண்டே இருப்பது எதுவோ அதுதான் எல்லாம் வல்ல இறை. ஆகவே அந்த இறைவனை உன்னுடைய செயலின் விளைவாகக் காலையிலிருந்து மாலைவரையில் பார்த்து மதிப்புக் கொடுத்து வா. அதுவே கடவுள் வணக்கம். அதைவிட்டு தனியாக ஒரு கடவுளைத் தேட வேண்டாம்.

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

– தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

* * * * * * * * * * * * * * *

 

 

“வாழ்க்கையையும் வாழ்க்கையின் நோக்கத்தையும்,

அந்நோக்கத்திற்கேற்ப வாழும் முறை என்ன என்பதை

அறிந்து கொள்வது ஞானம்”.

“அவனில் அணு, அணுவில் அவன்

உன்னில் எல்லாம் உன்னை நீ அறி”.

“உய்யும் வகைதேடி உள்ளம் உருகிநின்றேன்

உயர் ஞானதீட்சையினால் உள்ளொடுங்கி

மெய்யுணர்வு என்ற பெரும் பதம் அடைந்தேன்

மேல்நிலையில் மனம்நிலைத்து நிற்க நிற்க

ஐயுணர்வும் ஒன்றாகி அறிவறிந்தேன்

ஆசையென்ற வேகம் ஆராய்ச்சி யாச்சு

செய்தொழில்களில் கடமை உணர்வு பெற்றேன்

சிந்தனையில் ஆழ்ந்து பல விளக்கம் கண்டேன்.”

அறிவும் புலன்களும் :

“அறிவைப் புலங்களில் அதிகநாள் பழக்கினேன்,

அதன்பலன் உணர்ச்சிகள் அறிவை வென்றன.


அறிவையறிவால் ஆராயப் பழக்கினேன்;

அந்த நிலையிலும் புலன்களை இயக்கினேன்,

அறிவு அகண்டாகாரத்தில் நிலை பெற

அதிகவிழிப்பும் வழக்கமும் பெற்றது;

அறிவு புலன்களை அறிந்தது, வென்றது.

அங்கு வாருங்கள் அமைதி விரும்புவோர்.”

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

– தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

NEXT      : மே 28 : மந்திரம்

PREV      :  மே 26 : தவமா? தற்சோதனையா? எது எதற்கு உதவுகிறது ?

நாளொரு நற்சிந்தனை:



Like it? Please Spread the word!