x

மே 18 : உயிர் அறிவை உள்ளுணர்வாய்ப் பெறுதல் வேண்டும்

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.


உயிர் அறிவை உள்ளுணர்வாய்ப் பெறுதல் வேண்டும் :

எனது வாழ்க்கையில் 50 ஆண்டு காலம் நான் பொருள் துறையிலே கழித்தேன். பொருள் பெருக்கி அதனைச் செலவிட்டு அதன் மூலம் மக்களுக்கு நன்மை செய்ய முடியுமா என்று முயன்று பார்த்தேன் முடியவில்லை. அடுத்து நாம் ஏதேனும் அரசியலுக்கு உதவ முடியுமா என்று கட்டுரைகள் வாயிலாகவும் திட்டங்கள் வாயிலாகவும் உணர்த்தி வந்த போது ஏதோ ஒரு சிறிய அளவு பலன் தான் காண முடிந்ததே தவிர அது நிலைக்கவில்லை. இறுதியாக ஆன்மீகத்துறையில் வந்த பிறகு தான் ஒரு உயிருக்கு உணர்வு ஊட்டினால் கூட அதிலே நிறைவு இருக்கிறது.

ஒரு குடும்பத்திற்கு ஒரு இனிமையான வாழ்வு வாழ்வதற்கு அவர்களுக்கு ஊக்கம் அளித்தால் அதிலே ஒரு நிறைவு இருக்கிறது. இவ்வாறாக தனிமனிதன், குடும்பம், சமுதாயம் உலகம் என்ற முறையிலே தனி மனிதனிடத்திலே அமைதி வேண்டும். அந்த அளவிலே ஒவ்வொரு மனிதனுடைய உள்ளமும் உணரவேண்டும் என்றால் மனிதன் மனதை உணர வேண்டும் மனதுக்கு அடித்தளமாக இருக்கக்கூடிய அறிவை உணர வேண்டும் அறிவின் இருப்பிடமாக உள்ள உயிரை உணர வேண்டும். இதை உணர்வது ஒன்றும் சிரமமே இல்லை. உங்களுக்குள்ளாக நீங்களாக இருந்து கொண்டு அதைத் திருப்பிச் சிந்தனை செய்து அதை அறிந்து கொள்ளும்போது இந்த மனம் இந்த முனையில் மனமாக இருக்கிறது. மற்றொரு முனையில் எல்லாம்வல்ல இறைவனாக இருக்கிறது என்பதைக் காணலாம். அது சுலபமே. அதற்கு ஒரு சிறு பயிற்சிதான் தேவை. அந்தப் பயிற்சியிலே ஆழ்ந்த சிந்தனை விளக்கம் தான் தேவை.

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

– தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

* * * * * * * * * * * * * * *

 

 

“அறிவை அறிவால் அறிந்த நிலையே முக்தி.

அறிவை அறிந்தோர் அன்பின் அறமே ஞானம்”.

“நேற்று அசாத்தியமாய் இருந்தது,

இன்று சாத்தியமாகும் அற்புதத்தை

ஒவ்வொரு நாளும் நாம் கண்டுவருகிறோம்”.

“செயல், ஒழுக்கம், சேவை, சிந்தனை, சீர்திருத்தம், சிக்கனம், இவை ஐந்தும்

செழிப்பான வாழ்வளிக்கும்”.

“உலகிலுள்ள பொறுப்புடைய தலைவரெல்லாம்

உயிரறிவை உள்ளுணர்வாய்ப் பெறுதல் வேண்டும்.

உலகனைத்து நாடுகளின் எல்லைகாக்க

ஓருலகக் கூட்டாட்சி வலுவாய் வேண்டும்.

உலகில் போர் பகை அச்சமின்றி மக்கள்

உழைத்துண்டு வளம்காத்து வாழவேண்டும்.

உலகெங்கும் மனிதகுலம் அமைதியென்னும்

ஒரு வற்றாத நன்னிதி பெற்றுய்யவேண்டும்.”

“ஒன்றி ஒன்றிப் பழகிவரும் அறிவிற்கன்பு ,

உறுதி, நுட்பம், சக்தி இவையதிகமாகும்;


அன்று அன்று அடையும் அனுபவங்கள் எல்லாம்

அறிவினிலே நிலைத்துவிடும் ஆழ்ந்து ஆய்ந்து

நன்று என்று கண்டபடி செயல்கள் ஆற்றும்

நற்பண்பு புலன்களுக்கு அமைந்துபோகும்;

என்றென்றும் கருவிடத்தே அறிவை ஒன்றும்

இயற்கை முறை சிறப்புடைத்து; ஈது தவமாம்”.

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

– தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

NEXT      :  மே 19 : வாழ்க வையகம்

PREV      :   மே 17 : விழிப்புநிலையின் மேன்மை

நாளொரு நற்சிந்தனை:



Like it? Please Spread the word!