x

மே 16 : இனிமை கெடாத வாழ்வு

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.


இனிமை கெடாத வாழ்வு :

“வாழ்க்கையில் என்றும் மகிழ்ச்சி நிலவ வேண்டும். அதற்கு ஏமாற்றமில்லாமல் வாழ வேண்டும். ஏமாற்றம் என்பது துன்பமும் சோர்வும் அளிக்கின்ற ஒரு மனநிலை. அது தன்னாலும் வரலாம். பிறராலும் வரலாம். இயற்கையாலும் கூட எழலாம்.

1) பேராசை

2) அறியாமை

3) தப்புக் கணக்கு

4) விழிப்பின்மை

5) பகை

6) இயற்கைச் சீற்றம்

ஆகிய ஆறு வகையில் ஏமாற்றங்கள் வருகின்றன. ஏமாற்றத்தின் அளவுக்கேற்ப அதிர்ச்சியும் துன்பமும் விளையும். அவ்வப்போது ஈடு செய்துவிடக் கூடிய சிறு சிறு ஏமாற்றங்களும் உண்டு. நீண்ட நாட்களுக்குத் துன்பம் தொடரக் கூடிய ஏமாற்றங்களும் உண்டு. வாழ்நாள் முழுவதிலும் கூட ஈடு செய்துவிட முடியாத ஏமாற்றங்களும் உண்டு.

பொதுவாக எல்லோரும் தங்கள் வாழ்வில் காணும் துன்பங்களுக்கு இந்த ஏமாற்றமே பெரும்பாலும் காரணமாக இருப்பதால், ஏமாற்றத்தைத் தவிர்க்கக் கூடிய சிந்தனையும் அந்தச் சிந்தனை தந்த விளக்கத்தைச் செயலுக்குக் கொண்டு வருகின்ற அறிவு மேன்மையும் வேண்டும். விழிப்பின்மையால் அலட்சியம், அசிரத்தை, சோம்பல் இவற்றுக்கு இடம் கொடுத்தால் செயல்திறன் குன்றிவிடும். அம்மாதிரியான மனநிலையில் செயலாற்றி, அதன் காரணமாக வெற்றி தவறிப் போகும் போது கவலை வரும்.

சிந்தனையோடு ஆராய்ந்து நல்ல முடிவு எடுக்க வேண்டும். நல்ல முடிவை செயலுக்கு கொண்டு வரும் திறமும், துணிச்சலும் வேண்டும். இத்தகைய சிந்தனையும், அதனால் ஏற்படும் விழிப்புணர்வும், வாழ்க்கை முறையும் மனிதனின் வாழ்வில் வெற்றியையும், அமைதியையும் தரும்.”

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

– தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

* * * * * * * * * * * * * * *

 

“எதிர்பார்த்து எதிர்பார்த்து ஏமாற்றம் அடைவதனால் நாமே எல்லோரையும் எதிரிகளாக மாற்றிக் கொள்கிறோம். யாரைப்பார்த்தாலும் விரோத மனப்பான்மை உண்டாகும்”. “உடல் உயிர் அறிவு எவ்வாறு இயங்கிக் கொண்டிருக்கின்றன? இவற்றிற்கெல்லாம் உள்ள தொடர்பு என்ன? என்பதையெல்லாம் உணர்ந்து கொள்ள ‘மனவளக்கலை’ பயிற்சி வேண்டும்”.

 

எண்ணத்தின் சிறப்பு :

“எண்ணம்சொல் செயல்களெல்லாம் ஒன்றுக்கொன்று

இணைந்துள்ள தன்மையதைக் காணும்போது

எண்ணமே அனைத்துக்கும் மூலமாகும்

இன்பதுன்பம் விருப்பு வெறுப்பு உயர்வு தாழ்வு;

எண்ணத்தின் நாடகமே, பிரபஞ்சத்தின்

இரகசியங்கள் அனைத்துக்கும் ஈதே பெட்டி;

எண்ணமே இல்லையெனில் ஏதுமில்லை

எண்ணத்துக் கப்பாலும் ஒன்றுமில்லை.”

“மனம் புலன் உணர்வில் மயங்கிட மாயை ஆம்

மனம் உயிர் வெளியினில் மருவித் தோய்ந்திட

மனம் விரிந்தறிவெனும் மாபதம் எய்திடும்

மனம் அறிவாகிய மனிதனும் தெய்வமே”.

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

– தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

 

“நான் சொல்லும் பயிற்சியைச் செய்து பாருங்கள் அதற்காகப் பணம் தேவையில்லை. மனம் தான் தேவை” – மகரிஷி.

கற்பனையான எதிர்பார்ப்பு :
“அன்பர்களே ! நமது வாழ்க்கை முழுவதும் சோர்வு, ஏமாற்றம், துன்பங்கள் நிரம்பியுள்ளன. இதற்கெல்லாம் காரணம் பிறரிடம் கற்பனையாகவே எதிர்பார்ப்பதுதான் (Imaginary Expectation).
கற்பனை என்றால் அளவு மீறிய ஆசை. அளவு மீறிய ஆசையை வைத்துக்கொண்டு அவர்கள் இப்படிச் செய்ய வேண்டும், இன்னதைத் தரவேண்டும், இன்ன அளவில் செய்ய வேண்டும்
என்று ஒவ்வொருவரிடமும் நாம் எதிர்பார்த்துக் கொண்டு இருக்கிறோம்.

ஆனால் அவரவர்களுக்கு அறிவு இருக்கிறது. அவர் அவர்களுக்குத் தேவையிருக்கிறது. அவரவர்களுக்கு வாழ்க்கைச் சுதந்திரம் இருக்கிறது. இவ்வாறுதான் செய்ய வேண்டும் என்ற விருப்பம் அவர்களுக்கு இருக்கிறது. நமக்குத் தெரிந்தவர்கள் அவ்வளவு பேரும் நமக்கு அடங்கி, நமது அதிகாரத்திற்கு உட்பட்டு, நாம் சொன்னதையே செய்து கொண்டிருப்பார்களா?!
செய்வதே இல்லை; செய்ய முடியாது செய்யவும் மாட்டார்கள்.

நாம் எதிர்பார்த்து எதிர்பார்த்து ‘என் கணவர் இப்படித்தான் செய்ய வேண்டும் இதைத்தான் செய்ய வேண்டும், இந்த அளவில்தான் செய்ய வேண்டும்.’ என் மனைவி இதைத் தான் செய்ய வேண்டும். இதற்கு மேல் செய்யக்கூடாது’ என்ற அளவில் நமது ஆசையை முன் வைத்து எல்லை கட்டி கற்பனையை உருவாக்கிக் கொள்கிறோம். நிகழ்ச்சிகள் (செயல்) என்று வரும்போது இவர்கள் கற்பனையாக எதிர்பார்த்து இருந்தார்களே, அதற்கு ஒன்றுகூட ஒத்து வராது. என்றைக்கு அமைதியாக இருக்க முடியும்? முடியாது.

ஆகையால் எதிர்பார்ப்பதை அடியோடு விட்டு விட வேண்டும். அமைதி வேண்டும் மகிழ்ச்சி வேண்டும் நிறைவு வேண்டும் என்று சொன்னால் நான் சொல்லும் பயிற்சியைச் (Simplified Kundalini Yoga) செய்து பாருங்கள். அதற்காகப் பணம் தேவையில்லை. மனம் தான் தேவை. தெளிவோடும் தீரத்தோடும் செய்ய வேண்டும்.

‘கணவனாக இருந்தாலும், மனைவியாக இருந்தாலும் மகனாக இருந்தாலும் தாயாக இருந்தாலும் அவர்களிடம் நான் எதிர்பார்க்க வேண்டியதே இல்லை. அவரவர்கள் செய்வதைச் செய்யட்டும். ஆனால் மனைவி என்ற முறையில் கணவன் என்ற முறையில், மகன் என்ற முறையில் தாய் என்ற முறையில் வயதில், பொருளில், ஆற்றலில், அதிகாரத்தில் எந்த இடத்தில் இருக்கிறேன்? இதை வைத்துக் கொண்டு அவர்களுக்கு நான் என்ன உதவி செய்ய முடியும்? என்ன செய்ய வேண்டும்? என்று சிந்திக்க வேண்டும்.


ஒரு வீட்டில் பத்து பேர் இருக்கிறார்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். சிந்தனை செய்து ‘அவரவர்களுக்கு நான் என்ன செய்ய முடியும்?’ என்று உதவி செய்வதற்குத் தயாராக இருக்க வேண்டுமே தவிர, அவர்கள் இதைச் செய்ய வேண்டும் என்பதற்காக நான் இன்னதை செய்ய வேண்டும்’ என்பது இல்லை.

அப்படி நீங்கள் எதிர்பாராது இருப்பதனால் உங்களுக்கு வர வேண்டியது நிற்காது; வர வேண்டியது சரியாக வரும். அப்படி வரும்போது, எதிர்பார்ப்பதில் ஒரு கற்பனை மூட்டையைக் கட்டி வைத்திருந்தோமே, அதுவும் இதுவும் இடிபடாது. என்ன வந்தாலும் ஏற்றுக் கொள்வதற்கு அந்நேரத்தில் மனம் தயாராக இருக்கும்.

எந்நேரமும் கற்பனையான எதிர்பார்ப்பு என்ற ஒரே ஓர் வியாதியால் தான் இன்று மனித குலத்தில் துக்கம், சோர்வு, துன்பம், பகை, பிணக்கு எல்லாம் வருகின்றன. ‘நான் என்ன செய்ய வேண்டும்?’ என்று கடமையை உணராது அதில் ஓர் உரிமை கோரும் போது துன்பங்கள் தான் வரும்.

மனிதனிடம் இருக்கும் அறிவைக் கொஞ்சம் சிந்தனையில் திருப்பிக் கொண்டு, எதிர்பார்ப்பதை விட்டு விட்டு, கடமை செய்வதில் முனைந்து நிற்போம். முயன்றால், ஒரு வாரம் அல்லது பத்து நாட்களில் முழுமையான ஓர் மாற்றம் கிடைக்கும்; அமைதி கிடைக்கும். அதாவது செல்வந்தனாக இருக்கக்கூடிய உணர்வு வந்துவிடும்.

எதிர்பார்ப்பவன் எப்போதும் பிச்சைக்காரனாகத்தான் இருப்பான். எந்த நேரமும் யார் என்ன கொடுப்பார்களோ? என்றுதான் இருப்பான். எதிர்பார்ப்பவனாக இயற்கை நம்மைப் படைக்கவில்லை. அத்தகைய முழுமையோடு இயற்கை நம்மை உண்டாக்கி வைத்திருக்கிறது. நம்மிடம் எல்லாம் இருக்கிறது. கற்பனையான எதிர்பார்ப்பு சிறுமையைச் செய்து விடுகிறது. வருவதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

முதலாவது – எதிர்பார்த்தல் தவிர்ப்பது.

இரண்டாவது – பிறருக்கு என்ன செய்ய முடியும்? என்பது.

மூன்றாவது – எந்தச் செயல் செய்தாலும் அந்தச் செயலின் விளைவு பிறருக்குத் துன்பம் இல்லாது நட்டம் இல்லாது இருக்கும் அளவுக்கு பார்த்துக் கொள்வது.

இம்மூன்று கொள்கைகளைக் கடைபிடித்து மனதை வளப்படுத்தி, குடும்பநலம் பெறலாம்.அப்போது உலகமே நம்முடையதுதான். பக்கத்தில் இருப்பவர்கள், குடும்பத்தில் உள்ளவர்கள், அலுவலகத்தில் இருப்பவர்கள், எல்லோருமே நண்பர்களாகத்தான் இருப்பார்களே தவிர, எதிர்ப்பு என்பது இருக்கவே இருக்காது.”

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.
– தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

* * * * * * * * * * * * * * * * * * *

மற்றவரை எதிர்பார்த்தல், கையேந்தல் வேண்டாம்.

.”குற்றவாளி பாவியென்று யாருமில்லை உலகினில்
குறைகளுக்குக் காரணமோ பழைய சமுதாயம்;
கற்றிடுவோம் புதிய கல்வி கருத்துயர்த்தி மேலாம்
கடமைகளைச் சிந்தித்துச் செயலாற்றி உய்வோம்;
உற்றசெல்வம், உடலுழைப்பு, அறிவு இவை கொண்டு
உலகுக்கு உதவியருள் தொண்டாற்றி மகிழ்வோம்,
மற்றவரை எதிர்பார்த்தல், கையேந்தல் வேண்டாம்
மாநிதியாம் இறைவனை நம் மனத்தடியில் தேர்வோம்.”

– தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

 

NEXT      : மே 17 : விழிப்புநிலையின் மேன்மை

PREV      :  மே 15 : தனி மனிதன் காப்பு

நாளொரு நற்சிந்தனை:



Like it? Please Spread the word!