x

மே 13 : மன உறுதி

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.


மன உறுதி :

“ஏன் நாம் இயற்கையை உணர்ந்து கொள்ளவும் வாழ்க்கையின் உண்மையை உணர்ந்து கொள்ளவும் முடியாமல் தடுமாறுகிறோம்? ஏன் அமைதியான சீரான வாழ்வைப் பெற முடியாமல் அல்லலுறுகிறோம்? ஏன் இந்த நிலை என ஆய்ந்து பார்க்க வேண்டும்.

உதாரணத்திற்கு ஒன்று சொல்வேன். நீங்கள் ஒரு பையை எடுத்துக் கொண்டு நல்ல காய்கறி வாங்குவதற்காகக் கடைத் தெருவுக்கு புறப்பட்டு போகிறீர்கள். போகும் வழியில் விதவிதமாக பூக்களும் பழங்களும் உங்கள் கண்ணில் படுகின்றன. அவற்றை வாங்கி பையை நிரப்பிக் கொள்கிறீர்கள். பின்னர் கடைத்தெருவுக்குப் போய் காய்கறி வாங்கிய பிறகு பார்த்தால் அவற்றை வைக்க பையில் இடமில்லை. பையில் தான் ஏற்கனவே நிரப்பிவிட்டீர்களே !

இப்போது உங்கள் பிரச்சனை என்ன? ஏற்கனவே பையில் உள்ளவற்றை வெளியே கொட்டிவிட்டு எதை வாங்குவதற்காக கடைத் தெருவுக்கு வந்தீர்களோ, அந்தக் காய்கறியை வாங்கிப் போட்டுக் கொள்வதா? அல்லது காய்கறியே வாங்காமல் ஏற்கனவே வழியில் வரும்போது பையில் நிரப்பிக் கொண்டு வந்தவற்றுடன் வீடு திரும்புவதா? கடைத் தெருவுக்குப் புறப்படும் பொழுதே காய்கறி தான் வாங்கிக் கொண்டு திரும்ப வேண்டும் என்ற உறுதி வேண்டும்.

ஒவ்வொரு வகையிலும் அத்தகைய மன உறுதியைப் பெற்று இறைநிலை உணர்ந்து, உண்மை நெறியில் அறிவறிந்து வாழ்வது தான் தவம் (Yoga).”

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

– தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

* * * * * * * * * * * * * * * * *

 

 

“எண்ணம் தானாக எழுந்து அலையாமல் எண்ணத்தில்

எண்ணமாய் இருப்பதே யோகம்”.

“அகத்தாய்வு என்பது மனத்தூய்மையை

நாடிச் செல்லும் தெய்வீகப்பயணம்”.

“விளைவறிந்து நலமுணர்ந்து நல்ல நாட்டத்தோடு

எண்ணம், சொல், செயல்களைப் பயன்படுத்தும்

கலையே தற்சோதனை”.

“நிலையாமையை நினைவிற்கொள் – பிறப்பு, இறப்பு

நடுவே பூவுலக வாழ்வு, இதை மறக்கும் நிலையில்

உள்ள மதியின் போக்கே மாயை”

அறிவறியும் தவம்:

இரு விழிகள் மூக்கு முனை குறிப்பாய்நிற்க,

எண்ணத்தைப் புருவங்களிடை நிறுத்தி,

ஒருமையுடன் குருநெறியில் பழகும் போது,

உள்ளொளியே பூரித்து மூலமான

கருவுக்கு மேனோக்கு வேக மூட்டும்;


கருத்துக்கு இந் நிகழ்ச்சி உணர்வாய்த் தோன்றும்.

அருவ நிலையாம் ஆதி உருவாய் வந்த

அத்துவித ரகசியமும் விளக்கமாகும்.

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

– தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

NEXT      :  மே 14 : மூலமும் முடிவும்

PREV      :    மே 12 : இறையோடு இணைந்த செயல்

நாளொரு நற்சிந்தனை:



Like it? Please Spread the word!