x

மார்ச் 30 : நற்பண்பு காக்க

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்!!


 

நற்பண்பு காக்க:

தேவை, பழக்கம், சூழ்நிலை இவற்றின் உந்துதளால் தன்னை மறந்து, புலன் வழி நின்று வாழும் மயக்க நிலையிலிருந்து விடுபட்டு அறிவின் தெளிவோடு, வாழ்வின் பயனுணர்ந்து, புலன்களைக் கருவிகளாகக் கொண்டு விழிப்பு நிலையில் வாழும் பேறு பெற்றிருக்கிறோம். மெய்யுணர்தவத்தால் ஆன்மலயம், அறிவின் விழிப்பு, விளைவைக் கணித்துத் திட்டமிட்டுச் செயல்புரியும் பெருங்கணக்கு இவை நமக்கு நாளுக்கு நாள் இயல்பாக ஓங்கி வருகின்றன.

இவ்வுயர் அன்பு பேற்றினைக்கொண்டு நாம் சிறப்பாகவும் வளமுடனும் வாழ வேண்டும். வாழும் மக்களுக்கும் வருங்கால உலகுக்கும் நாம், வாழ்க்கை வழி காட்டிகளாக விளங்க வேண்டும். இத்தகைய பொறுப்புக்கள் நமக்கு இருக்கின்றன. இப்பொறுப்புகளை நமது கடமையாகக் கொண்டு நாம் செயலாற்றி வாழ வேண்டும்.

பொருள் வளம், ஒழுக்கம், இறையுணர்வு மறவாத மனநிலை, தொண்டு என்ற நான்கு பண்புகளும் மனிதன் வாழ்வின் உயர்வுக்கு இன்றியமையாத தேவைகள். மயக்கமுற்ற உலகின் பலதரப்பட்ட மக்களுடன் ஒட்டி, உறவு பூண்டு நாம் கடமையாற்றி வாழ்கிறோம்.

இதனால் இந்த நான்கு பண்புகளையும் காப்பது மிகவும் கடினம்தான் என்றாலும் நாம் மதிப்பு மிக்க நற்பண்புகளைக் காத்தே ஆக வேண்டும். அது தான் நமது தலையாய கடமை. வரவுக்குட்பட்டுச் செலவை வரையறுத்து வாழ்வதிலும், தேவையின் அவசியமுணர்ந்து பொருள் பெற்றுத் துய்ப்பதிலும் மிகவும் விழிப்போடு இருக்க வேண்டியுள்ளது.

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்..

தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

* * * * * * * * * * * * * * * * * * * * * * * *

“இன்பமும் அமைதியும் மனதிற்குள்ளிருந்து தான்

வர வேண்டும் என்பதை அறியாதோர் எங்கெல்லாமோ

அதைத் தேடி அலைந்து துன்புறுகிறார்கள்.”

அமைதியின்மை எதனால்?

“அறிவறிந்தோர் அகத்ததை மெய்ப்பொருளாய்க் காண்பார்

அறியாதோர் உடலளவில் எல்லையானார்

அறிவறிந்தோர் அறுகுணங்கள் நிறைவமைதி,

அன்பு, கற்போடு, ஞானம், மன்னிப்பாச்சு

அறிவறியார் அறுகுணத்தால் பகை, பிணக்கு,

அச்சம், போர், இவையாகித் துன்பம் ஏற்பார்

அறிவறிந்த அறியாத ஏற்றத் தாழ்வே

அமைதியின்மை விளைந்துளது மனிதர் வாழ்வில்.”

அமைதி பெறுவீர்:

“அறிவு என்பதோ களங்கமற்றது

அன்பு ஒன்றே அதன் இயல்பாகும்;

அனுபவம் தேவைகள் என்னும் இரண்டால்

அதுவே குணங்களாய்க் களங்கமுற்றது ;


அறிவு அகம் நோக்கித் தன்னிலை கண்டிட

அகன்று போகும் களங்கம். சுயமாகும்

அன்பு தொண்டு அறம் இயல்பாகிவிடும்

அந்த நிலைநாடி அமைதிபெறுவீரே!.”

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்..

– தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

NEXT      :  மார்ச் 31 : விஞ்ஞானம், மெய்ஞ்ஞானம்

PREV      :  மார்ச் 29 : பூரணப் பொருள்கள்

நாளொரு நற்சிந்தனை:



Like it? Please Spread the word!