x

மார்ச் 25 : மனவளக்கலை

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்!!


 

மனவளக்கலை:

“உலக சமுதாயச் சூழ்நிலையில் விரிந்த கண்ணோட்டத்தோடு மக்களுக்குத் தொண்டு முறையில் ஆன்மீக அறிவை ஊக்குவிக்கவும், அதனைத் தடுத்துக் கொண்டிருக்கும் கற்பனைப் புகையையும், துன்பங்கள், சிக்கல்கள், இவற்றைக் குறைப்பதற்காகவும் திட்டமிட்டுத் தொடங்கப்பெற்ற நிறுவனமே “உலக சமுதாய சேவா சங்கமும்” அதன் செயல்வழியாகிய “மனவளக்கலையுமாகும்”. “கர்மயோகம்” என்னும் வாழ்க்கை நெறியை மக்கள் பண்பாடாக வளர்ப்பது சிறந்ததோர் சீர்திருத்தத் திட்டமாகும். சிந்தனையை வளர்க்கவும், அறிவுக்கு நுண்மை, கூர்மை, உறுதி, தெளிவு இவற்றையளித்து அமைதியை உருவாக்கவல்ல “அகத்தவமுறை” இதில் இருக்கிறது.

நான் என்ன செய்கிறேன், இதனால் என்ன விளைவு ஏற்படும் என்பதையுணர்ந்து நலனை தேர்ந்து செயலாற்றும் பண்பாட்டை வளர்க்க “அகத்தாய்வுப் பயிற்சி” இருக்கிறது. நோய்களைப் போக்கிக் கொள்ளவும், நோய் வராமல் காக்கவும் ஏற்ற உடற்பயிற்சியும் உடலோம்பும் அறிவுப் பாடங்களும் உள்ளன. விளைவறிந்து செயலாற்றும் விழிப்பு நிலையில், ஒவ்வொரு செயலிலும் இறையுணர்வைப் பெற்றும் “அறவழி வாழவும்” ஏற்ற கர்மயோக நெறி நிற்கும் வாழ்க்கை முறை இருக்கிறது.

பிறவிப் பயனாகிய அறிவை அறிய, இறைநிலையோடு ஒன்று கலந்து பேரின்ப வாழ்வினை அனுபவிக்க ஏற்ற அறிவு விளக்கப் பயிற்சியும் வாழ்வு முறையும் உள்ளன. தன் தகுதியை விளங்கிக் கொண்டும், அதை வளர்த்துக் கொண்டும், தன்னம்பிக்கையோடு வாழ்வை நடத்த அச்சமின்மையும், தகைமையும் வளர்த்துக் கொள்ள ஏற்ற ஆக்கமுறை வாழ்க்கை நெறி இருக்கிறது. பொதுவாகவும் சுருக்கமாகவும் சொல்லுமிடத்து மனிதன் மனிதனாக வாழ ஏற்ற ஒரு சாதனை வழியே “மனவளக்கலையாகும்”.

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்..

தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

* * * * * * * * * * * * * * * * * * * * * * * *

ஒடுங்கி-உணர்ந்திடு:

“நினைவை யடக்க நினைத்தால், நிலையா.

நினைவை யறிய நினைத்தால், நிலைக்கும்.”

பற்றற்ற வாழ்வு :

“நெற்றியில் உச்சியில் ஞாபகமாயிரு,

உற்றுற்றுப் பார்த்திடு உன்னை உலகை பின்,

கற்றபடி நட கருத்து விழிப்புடன்,

பற்றற்று வாழும் பழக்கம் உண்டாகிவிடும்.”

குழந்தைகட்கே பக்தி நெறி :

“உருவ வழிபாடு சிறுகுழந்தைகட்கு மட்டும்

உயர்ந்த முறை; மனதுவளம், அடக்கம் இவைபழக

பருவமடைந்தோர்கட்குப் பதினெட்டாண்டின் மேல்

பருப் பொருட்கு மூலநிலை விண்ணுணரும் அறிவும்

அருவநிலை அகத்துணரும் அகத்தவம் இப்பார்

அனைத்தும் வாழ்மக்களுக்கும் பொதுத்தேவை உய்ய

கருவழியே நற்பிறப்பும் மும்மலங்களான

கரை மறைந்து மனிதகுலம் மேன்மை வளம் எய்தும்.”


மனித மாண்பு (Simplified Kundalini Yoga) :-

“மனிதவுயிர் பிறவியதன் மதிப்புணர வேண்டும்

மனம் உயிர்மெய்மூன்றான மறைபொருட்களான

மனிதனுடைய ஆற்றல்களை மலரவைக்க வேண்டும்

மறைந்திருக்கும் உட்பதிவாம் பலவினைகடம்மை

மனிதனேமாற்றி அறச்செயல் பதிவு செய்து

மனத்தூய்மை வினைத்தூய்மை பெற்று பரத்துறைந்து

மனிதனவன் உயர்மனிதனாக வாழச்செய்யும்

மனவளக்கலையிதனைப் பரப்பி நலம் காண்போம்.”

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்..

– தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

NEXT      :   மார்ச் 26 : ஆஸ்தீகமும் நாஸ்தீகமும்

PREV      :   மார்ச் 24 : கற்பனைகள் மலரும் விதம்

நாளொரு நற்சிந்தனை:



Like it? Please Spread the word!