x

மார்ச் 22 : கருமையம் தூய்மையாக இருக்கட்டும்

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்!!


 

கருமையம் தூய்மையாக இருக்கட்டும்:

உடலுக்கு மூலப் பொருள் வித்து

உயிருக்கு முக்கியப் பொருள் விண்துகள்கள்

மனதுக்கு மூலப் பொருள் சீவகாந்தம்.

இவை மூன்றும் மையம் கொண்டிருப்பது உடலுக்கு மையமான பகுதியாகிய மூலாதாரம். மூலாதாரம் என்பது மனித உடலுக்கு கருமையம்.
கருமையம் தான் மனிதனின் பெருநிதி; செயலுக்கேற்ற விளைவைத் தரும் தெய்வீக நீதிமன்றம். பிறப்பிற்கும் இறப்பிற்கும், தொடர் பிறப்புகள் பலவற்றுக்கும் இடையே வினைப்பதிவு பெட்டகமாக தொடர்ந்து வரும் மாயத்துணைவன்; தெய்வத்தையும், மனிதனையும் இணைத்துக் காட்டும் அறிவின் பேரின்பக்களம்.

இத்தகைய பெருமை வாய்ந்த கருமையத்தைத் தூய்மையாக வைத்துக் கொள்வதற்கான வழிமுறைகள்.

1) பெற்றவர்கள், குரு, ஆட்சித்தலைவர், தெய்வம் இவர்களை மதித்து வாழ்தல்.

2) ஒழுக்கம் கடமை ஈகை மூன்றும் இணைந்த அறநெறியை பின்பற்றுதல்.

3) அகத்தவப் பயிற்சியை முறையாகச் செய்து வருதல்.

4) இரத்தம், காற்று, உயிர், சீவகாந்தம் இவை தடையின்றி ஓடி உடலைக் காத்துக் கொள்ள ஏற்ற உடற்பயிற்சிகளை அளவோடு செய்து வருதல்.

5) பெற்றோர்கள், வாழ்க்கைத் துணைவர், பெற்ற குழந்தைகள் இவர்களை பொறுப்போடும் அக்கரையோடும் காத்து உதவி வருதல்.

6) இறைநிலை உணர்ந்து அந்நிலையோடு அடிக்கடி ஒன்றி பழகுதல்.

7) மனித முயற்சியால் உற்பத்தி செய்த பொருட்களையும் இயற்கை வளத்தையும், பிறர் உபயோகிக்கும் பொருட்களையும் சேதப்படுத்தாது மதித்து நடத்தல்.

8) நாம் பார்க்கும் ஒவ்வொரு உடலும் இயற்கை என்ற பேராற்றலால் கட்டப்பட்டிருக்கும் பெருமையை உணர்ந்து உடலுக்குள் அறிவாக விளங்குவது தெய்வத்தின் ஒளியே என்று மதித்து ஒத்தும் உதவியும் வாழ்ந்து வருதல்.

9) உள்ளத்தில் பகை வஞ்சம் எதையும் வைத்துக் கொள்ளாமல் மன்னிப்பும், கருணையும் கொண்டு எல்லோருடனும் இன்முகத்தோடும் அன்போடும் பழகுதல்.

10) தேசம், மதம், சாதி, இனம், மொழி இவற்றால் மனிதரை வேறுபடுத்திக் காணாமல் எல்லோரும் இயற்கையின் மக்கள் என்ற நினைவில் வாழ்தல்.

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்..

தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

* * * * * * * * * * * * * * * * * * * * * * * *

“நாம் செய்யக் கூடிய செயல்களான உணவு, உழைப்பு, உறக்கம், உடலுறவு,

எண்ணம்

என்ற இவை ஐந்தில் அலட்சியம் செய்யாமலும், மிதமிஞ்சி

அனுபவிக்காமலும்,முரண்பாடாக அனுபவிக்காலும், இருக்க வேண்டும்.

அதேபோல ஒவ்வொருவருடைய உடலும் மனமும் இயங்கிக்

கொண்டிருப்பதனால், மற்றவர்களுடன் முரண்படாது இருக்க வேண்டும்.

பிறருடைய உடலுக்குத் துன்பமோ, மனதுக்கு வருத்தமோ – நம்மால்

ஏற்படாது இருக்க வேண்டும். இந்த விழிப்பு நிலை தான் இறைவழிபாடு”.

“திறந்து கொள் தான் தனது என்று சொல்லும்

சிற்றறையை. வெளியேவா. அகன்று நோக்கி


பறந்துலவு உலக சமுதாயத்தின் பரப்பகத்தில்.

பற்று அறும் கடமையினால் பழுக்கும் ஞானம்”.

கருமையத் தூய்மை கவி :

“நிறைவுபெறா மல்இருக்கும் ஆசைகளின் கூட்டம்,

நெஞ்சம்மனம் பேச்சுஇடை பிணக்காகும் பொய்கள்,

மறைமுகமாய் நேர்முகமாய்ப் பிறர்உளம்வருத்தல்,

மற்றஉயிர் சுதந்திரமும் வாழ்வின்வளம் பறித்தல்,

நிறைவழிக்கும் பொறாமை, சினம், பகைவஞ்சம் காத்தல்,

நெறிபிறழ்ந்த உணவுழைப்பு உறக்கம் உடலுறவு,

கறைபடுத்தும் எண்ணம் இவை கருமையம் தன்னைக்

களங்கப்ப டுத்திவிடும் கருத்தொடுசீர் செய்வோம்.”

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்..

– தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

NEXT      :   மார்ச் 23 : இறைநிலை இயல்புகள் காட்சியாகும்

PREV      :   மார்ச் 21 : நினைப்பது நடக்கும்

நாளொரு நற்சிந்தனை:



Like it? Please Spread the word!