x

மார்ச் 21 : நினைப்பது நடக்கும்

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்!!


 

நினைப்பது நடக்கும்:

விழிப்பு நிலையிலேயே இருக்கப் பழகிக் கொண்டோமானால், மற்றவர்களுடைய எண்ண அலைகள் தீமை விளைவிப்பனவாக இருந்தாலும், உணர்ச்சிக்கு ஊக்கம் கொடுப்பவையாக இருந்தாலும், அவை நம்மைப் பாதிக்காது. உதாரணமாக நான்கு வானொலி நிலையங்கள் நான்கு விதமான வேறுபட்ட நிகழ்ச்சிகளை ஒரே நேரத்தில் ஒலிபரப்புகின்றன. நம் ரேடியோவை எந்த அலை நீளத்தில் வைக்கிறோமோ அது மாத்திரம் தான் இங்கே கேட்கும். மற்றவை எல்லாம் வந்து மோதும்; ஆனால் கேட்காது.

அதுபோலவே, தேவையற்ற அலைக்கழிப்பும் பாதிப்பும் இல்லாமல் விட்டுவிலகி எந்த நிலையில் இருக்கிறோமோ அந்த நிலைக்கு ஏற்ப நமக்கு என்ன தேவையோ அது கிடைக்கும். நாம் என்ன செய்ய வேண்டுமோ அதை நினைப்போம். நாம் என்ன நினைக்கிறோமோ அதைச் செய்ய முடியும் என்ற அளவிலே மனிதத்திறமை வெளிப்படுகிறது. இந்த மனிதத்திறமை அதிகரிக்க அதிகரிக்க என்ன ஆகும்? நாம் எங்கு போனாலும், நமக்காக மற்றவர் தாமாகவே அந்த அலையிலேயே கட்டுப்பட்டு, நம் மதிப்பை உணர்ந்து புரிந்து கொள்ள அவர்களுக்கு எண்ணம் தோன்றும்; எங்கே போனாலும் நமக்கு வெற்றியாகவே இருக்கும்.

அப்படி எங்கேயாவது வெற்றி இல்லாமல் தடை ஏற்பட்டாலும் அந்தத் தடையினால் நமக்குக் கெடுதல் இல்லை. “நம்மைத் திருப்பி விடுவதற்காக இந்த அலை நீளத்தில் தேவையில்லாதவற்றைத் தள்ளி விடுகிறது. அதனால் அந்த வேலை நடக்கவில்லை, “என்று எண்ணி அமைதி அடைந்தால், எந்தக்காலத்தில் எந்தச் சூழ்நிலையில் அந்த வேலை நடக்க வேண்டுமோ அது தானாகவே நடந்துவிடும்.

முற்றறிவு (Total Consciousness) என்று சொல்லக்கூடிய பிரபஞ்சம் முழுவதும் நிறைந்திருக்கக் கூடிய இதே அறிவு தான் எங்கேயும் இருக்கிறது. அது தொகுப்பறிவு (Collective Knowledge). அதனால், அந்த இடத்திலிருந்து நாம் எண்ணிய எண்ணத்திற்குரிய காலமும் வேகமும் வரும்போது அது தானாகவே மலர்ந்து செயலாகிறது.

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்..

தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

* * * * * * * * * * * * * * * * * * * * * * * *

“அறிவை அறிய ஆர்வம் எழுந்து விட்டால்

அது தன்னை அறிந்து முடிக்கும் வரையில்

அமைதி பெறாது”.

“அறிவின் குறைபாட்டினால் இயற்கை நியதி தெரிவதில்லை,

செயல் விளைவுத் தத்துவம் (Cause and Effect System) புரிவதில்லை; தவறு

செய்தால் இன்றோ நாளையோ – அறிவிற்கோ உடலுக்கோ – துன்பம்

விளையும் என்பது தெரிவதில்லை. இத்தகைய அறியாமையால் தவறு

செய்து பின் கவலைப்படுகிறோம்”.

“இயற்கையை எவ்வளவுக்கெவ்வளவு நாம் அறிந்து கொள்கிறோமோ,

அவ்வளவுக்குத்தான் நம் மனம் விரிவும், திண்மையும் பெறும். மனதின்

திண்மைக்கு ஏற்பவே செயல் திறம் அமையும். செயல் திறமைக்கு ஏற்ப

வாழ்க்கையானது வெற்றியும், மகிழ்ச்சியும் நிரம்பியதாக விளங்கும்;

மனிதனின் துன்பமெல்லாம், அவனுடைய குறையெல்லாம் – இயற்கையை


‘அறியாமலும்’ அல்லது அறிந்தும் அதனை ‘மதியாமலும்’ அவன் நடந்து

கொள்வதாலேயே தோன்றுகின்றன.”

அகத்தவப் பேறு (Simplified Kundalini Yoga) :

“அகத்தவத்தால் “ஆ” லயமாம் சிறந்த வழிபாடு

ஆராய்ச்சி அறிவுடையோர்க் கேற்ற உயிர்ப் பேறு

அகத்தவத்தால் தனையறிந்து பழிச்சுமைகள் போக்கி

அறநெறியில் பிறழாது ஆற்றி வாழலாகும்;

அகத்தவமோ தனையறிந்த ஞான ஆசானின்றி

அறிந்திடவோ பழகிடவோ முயல்வது கூடாது;

அகத்தவத்தை மெய்விளக்க மன்றங்கள் மூலம்

அறிந்தெளிதில் பயின்றுபயன் பெற்றுய்ய வாரீர்.”

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்..

– தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

NEXT      :  மார்ச் 22 : கருமையம் தூய்மையாக இருக்கட்டும்

PREV      :   மார்ச் 20 : தவத்தின் பயன்கள் பத்து

நாளொரு நற்சிந்தனை:



Like it? Please Spread the word!