x

மார்ச் 18 : அன்பும் கருணையும்

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்!!


 

அன்பும் கருணையும் :

இயற்கையை ஆராய்ந்து பார்த்தால் அன்பும் கருணையும் தான் எங்கும் எதிலும் அமைந்திருக்கக் காணலாம். அன்பு என்பது எந்த ஒன்றையும் உடலாலோ, மனத்தாலோ தன்னோடு இணைத்துப் பிடித்துக் கொண்டிருப்பது. அப்படி இணைந்துள்ள மற்றொன்றுக்குத் தனது ஆற்றலைத் தொடர்ந்து அளித்து அதனைக் காத்து வருவது கருணை.

ஒரு முட்டையைப் பாருங்கள். அதிலுள்ள அணைத்துப் பொருட்களையும் ஒன்றிணைத்து அதன் ஓடு பிடித்துக் கொண்டிருக்கிறது. இது போன்றது அன்பு. முட்டைக்குள்ளிருக்கும் மஞ்சட் கருதான் குஞ்சு ஆக உருவாக இருக்கிறது. அந்த மஞ்சட் கருவுக்கு அதனைச் சுற்றியுள்ள வெள்ளைக்கரு தேவையான எல்லாப் பொருட்களையும் அளித்து நலமளிக்கின்றது. இது போன்றது கருணை.

ஒரு மாமரத்தில் பிஞ்சுவிடுகிறது. அதனைச் சிறு காம்பின் மூலம் விழுந்துவிடாமல் மரமானது பிடித்துக் கொண்டிருக்கிறது. இது அன்பு. அவ்வாறு பிடித்துக் கொண்டே பிஞ்சு வளர்வதற்குத் தேவையான ரசாயன நீரை அந்த மரம் பாய்ச்சிக் கொண்டே இருக்கிறது. அது தான் கருணை.

உயிரினங்களில் ஒரு குழந்தையைப் பெற்ற தாய் அதனை எப்போதும் தன்னோடு இணைத்துப் பிடித்துக்கொண்டோ அல்லது அது பிரிந்து போய் விடாமல் கண்காணித்துக் கொண்டோ இருக்கிறாள் இது அன்பு. அதே காலத்தில் அந்தக் குழந்தை வளர்வதற்கும் வாழ்வதற்கும் தேவையான பால், உணவு இவைகளை அது வளர்ச்சி பெரும் வரையில் ஊட்டிக் கொண்டே இருக்கிறாள். இதுதான் கருணை.

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்..

தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

* * * * * * * * * * * * * * * * * * * * * * * *

 

 

“ஆறுகுணச்சீரமைப்பு பெற்று மனத்தூய்மை

பெறும் போது நம்மிடம் உள்ள அன்பும்

கருணையும் பீறிட்டு மேலோங்குகின்றன.”

“அன்பையும் கருணையையும் கொண்ட மனிதன்

அதை உணர்ந்து தன் வாழ்விலும் செயலிலும்

பின்பற்றி வாழ்வதே இறைவழிபாடாகும்.”

“அன்பிரக்கம் தொண்டு தவம் ஈகை இன்சொல்

ஆன்மிக நெறியாகும் போற்றிக்காக்க

துன்பங்கள் குறைந்துவரும்; மேலும் தெய்வத்

துணைகிட்டும்; வாழ்வில் புகழ் நிறைவு ஓங்கும்;

நன்முறையில் தனிமனிதன் வாழக்கற்றால்

நாட்டினிலும் வீட்டினிலும் அமைதி ஓங்கும்;

இன்பமயமே எங்கும், இந்த உண்மை


எளிதன்றோ கற்பதற்கும் வாழ்வதற்கும்”.

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்..

– தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

NEXT      :   மார்ச் 19 : பொய்யும் மெய்யும்

PREV      :  மார்ச் 17 : பகைவனுக்கருள்வாய்

நாளொரு நற்சிந்தனை:



Like it? Please Spread the word!