x

மார்ச் 15 : ஐவகைக் கடமைகள்

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்!!


 

ஐவகைக் கடமைகள் :

மனிதனுக்கு ஐந்து வகையிலே கடைமைகளுண்டு. அவை:
1) தான்,
2) குடும்பம்,
3) சுற்றம்,
4) ஊரார்,
5) உலகம்
ஆகிய இவைகளாகும்.

இந்த ஐவகையும் அவரவர்கள் ஆற்றலுக்கும், வயதிற்கும், அறிவிற்கும் தக்கவாறு உயர்த்திக் கொண்டே போகலாம். ஆனால், முதல் முக்கியத்துவம் உடலில் இருக்க வேண்டும். இரண்டாவதாகக் குடும்பம், பிறகு சுற்றம், ஊரார், உலகம் என்று இவ்வாறு விரிய வேண்டும். இந்த ஐந்திலே ஒன்றினால் மற்றொன்று பாதிக்கப்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

நாம் சமுதாயத்திற்காக உழைக்கின்றேன் என்றுக் கூறித் தன் குடும்பத்தைப் பராமரியாது விட்டாலோ, உடல் நலத்தைச் சிதைத்துக் கொண்டாலோ, சமுதாய நலனிற்கு ஒருவர் தொண்டு செய்ய முடியமா ? குடும்ப நலனும், உடல் நலமும் வீணாகிப் போய் விடும், ஒரு மனிதன் நல்ல முறையிலே வாழ்ந்தானேயானால் சமுதாயத்திற்கு லாபமாக, நன்மையாக அமையும்.

அவ்வாறின்றி அவன் உடல் நலம் குன்றி நோயுற்றால் சமுதாயந்தானே அதற்கு ஈடு செய்ய வேண்டும்? அப்பொழுது சமுதாயத்திற்கு இருவிதத்திலும் நஷ்டமாக வந்தடையும்; முதலாவதாக அவனால் கிடைக்கக்கூடிய லாபம் போய்விட்டது, இரண்டாவதாக அவனால் செலவும் இழப்பும் உண்டாகின்றன.

தனி மனிதன் தன்னைப் பாதுகாத்துக் கொள்வது என்பது சுயநலமல்ல. தன்னைச் சரியாக வைத்துக் கொள்வது, ஆற்றல் உள்ளவனாக மாற்றிக்கொள்வது, கல்வியிலே தேர்ந்தவனாக மாற்றிக்கொள்வது ஆகிய இவையெல்லாம் சுயநலமாகாது. நான் வாழக் கூடிய இந்த சமுதாயத்திற்கு நல்ல பிரஜையாக, நல்ல தொண்டனாக வரவேண்டுமென்ற ஒரு அடிப்படையிலேதான் ஒரு மனிதனுடைய நலம்.

அவனை அறியாமலேயே அவன் செய்யக்கூடிய நல்ல காரியங்களெல்லாம் கூட சமுதாயத்திற்கு நன்மையாகவே முடியும். பிறர்க்குத் தொண்டாற்ற வேண்டும், பிறர்படும் துன்பத்தை நீக்கித் துணை புரிய வேண்டும் என்ற வகையிலே தனி மனிதனுடைய தயாரிப்பு நிலை சமுதாய வளத்தையே பெருக்கச் செய்யும்.

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்..

தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

* * * * * * * * * * * * * * * * * * * * * * * *

“உனக்கும் நல்லதாய் ஊருக்கும் நல்லதாய்

நினைப்பதும் செய்வதும் நித்திய கடன்”.

“கடமையில் சிறந்தவன் கடவுளை நாடுவான்.

கடவுளை உணர்ந்தவன் கடமையில் வாழ்வான்”.

பொருள் மதிப்பு:

“வாழ்க்கைச் செலவிற் கேற்ற

வரவிலையேல் பண்பாட்டை

வளர்க்கவோ காக்கவோ

வழியில்லை இதையுணர்வீர்”

கருதவமே போதும் :

“கல்லும் மரமும் மௌன நிலையில் நின்று

கடமை தவறாது பயனாகும்போது


சொல்லும் கருத்தும் உடைய மனிதன் ஏனோ

சுகங்கெட்டுச் சமூகத்தை மறக்க வேண்டும்;

அல்லும் பகலும் ஆசை ஒழிக்க வென்றே

ஆசைதனை பேராசையாக்கிக் கொண்டு

தொல்லை படும் அன்பர்களே சுருங்கச் சொல்வேன்

சுய நிலையை அறிய கருதவமே போதும்.”

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்..

– தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

NEXT      :  மார்ச் 16 : ஐவகை அறிவுத்திறன்

PREV      :   மார்ச் 14 : அடிப்படைத் தேவைகள்

நாளொரு நற்சிந்தனை:



Like it? Please Spread the word!