x

மார்ச் 06 : ஊனுடலே வாகனம்

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்!!


ஊனுடலே வாகனம் :

“நாம் சமுதாயத்தில் ஓர் அங்கம். இந்த உடல் சமுதாயத்தின் சொத்து. அதனைக் கெடுப்பதற்கு நமக்கு அதிகாரம் இல்லை. இந்த உடலுக்காக நாம் சமுதாயத்தில் கடன்பட்டிருக்கிறோம். மற்றும் அன்றாட அனுபோகப் பொருட்களையும் அதனிடமிருந்து பெற்று அனுபவித்து வருகிறோம். இந்தக் கடனைத் திருப்பித் தரும் வழியே கடமை எனப்படுகிறது.
அவர்களது உடலாற்றலையும், அறிவாற்றலையும் அந்தந்த நேரத்திற்கும் சூழ்நிலைக்கும் ஏற்றபடி குறைவில்லாமல் சமுதாய நலத்திற்கு அர்ப்பணமாகச் செலவிடல் தான் கடமை.

உடலைக் கொண்டு தான் இந்தக் கடமையை ஆற்ற வேண்டும்.
உடல் நலக்குறைவு ஏற்படும் போதும், நலிவுற்ற போதும் சமுதாயம் நம்மைக் கவனிக்க வேண்டி வந்து விடுகிறது. இதனால் சமுதாயத்திற்கு வரவேண்டிய வரவும் நின்றுபோய் மருந்தென்றும் உபசரணை என்றும் நம்மால் சமுதாயத்திற்கு இழப்பு உண்டாகிறது. எனவே தான் கடமையை வகைப்படுத்தும் போது உடல், குடும்பம், சுற்றம், ஊர், உலகம் என்று உடல் கடமைகளை மற்றவற்றின் முன்னால் வைக்கப்பட்டது.

இனி ஆன்மீக நோக்கில் உடல் நலத்தின் அவசியத்தை ஆராயலாம். இதுவரை மனிதனிடம் ஏற்பட்டுள்ள களங்கங்கள் பாவப்பதிவுகள் நீங்கினால் தான் உயிருக்கு வீடுபேறு, விடுதலை கிடைக்கும். பாவப்பதிவுகள் எப்படிப் போகும். உடலை எடுத்தால் தான் அந்தப் பாவப் பதிவுகள் துன்பமாக அனுபோகமாகி நீங்கும் அல்லது யோக சாதனைகள் மூலம் நீக்கிக் கொள்ளலாம்.

அதற்குத் தான் இந்த உடலை உயிர் எடுத்து வந்தது. உயிர் தன் மூலத்தை அறிந்து கொள்ள எடுக்கின்ற முயற்சிக்கும் இந்த உடல் தேவைப்படுகிறது. ஆகவே உடலை உயர்வாகக் கருதி, சீர்கேடு அடையாமல் போற்றிப் பாதுகாக்க வேண்டும். அப்போது தான் ஆன்மீகப் பயணம் தடைபடாமல் இருக்கும்.”

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்..

தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

* * * * * * * * * * * * * * * * * * * * * * * *

 

 

“அண்டத்தில் கடவுளாய் அழைக்கப்படுபவன்

பிண்டத்தில் உயிரெனப் பேசப்படுகிறான்;

கண்டத்தின் மேலே கருவில் நிலைத்தவன்

அண்டத்தும் பிண்டத்தும் அவனையே காண்கின்றான்”.

“அவனில் அணு, அணுவில் அவன்,

உன்னில் எல்லாம், நீ அறி உன்னை”.

பழிச்சுமை கழி:

“ஐயுணர்வின் வயம் ஏற்ற

ஆன்மாவின் பழிச் சுமையை

மெய்யுணர்வு பெற்றாற்றி

மிக எளிதில் கழித்திடலாம்.

தெய்வ நிலையுடன் அறிவைச்


சேர்த்தொன்றும் தவம் பயின்று

உய்ய நினைந்தால்; உலகீர் !

உடனே என் தொடர்பு கொள்வீர்!”

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்..

– தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

NEXT      :  மார்ச் 07 : உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்

PREV      :  மார்ச் 05 : ஆசை நிறைவேறும்

நாளொரு நற்சிந்தனை:



Like it? Please Spread the word!