x

மார்ச் 02 : தற்காலத்திற்கேற்ற உடற்பயிற்சி

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்!!


தற்காலத்திற்கேற்ற உடற்பயிற்சி :

நினைவுக்கு எட்டாத காலமுதற்கொண்டே பருவநிலை, வாழ்க்கை முறை, இன்னும் இதர பழக்க வழக்கம் ஆகியவற்றைக் கொண்டு பல்வேறு நாடுகளில் பல வகையான உடற்பயிற்சிகள் உருவாகியுள்ளன. முன்பு வாழ்க்கை முறை மெதுவாக ஊரும் [நகரும்] நிலையில் இருந்ததால் அதற்குத் தக்கவாறு உடற்பயிற்சிகள் உருவாக்கப்பட்டன.

அந்தக் காலம் இப்போது மாறிவிட்டது. விரைவு, அழுத்தம், பரபரப்பு உள்ள சூழ்நிலையில் நாம் வாழ்கிறோம். நமது தேவைகளும் வேறு விதமாகிவிட்டன. ஆகவே முந்தைய உடற்பயிற்சிகள் இந்தக்கால சூழ்நிலைகளுக்கு எற்றவையாகா.

இது சம்பந்தமாகப் பல ஆண்டுகள் நான் சிந்தித்து வந்தேன். பலவிதமான ஆசனங்களையும் உடற்பயிற்சிகளையும் ஆராய்ந்து பார்த்தேன். இப்பயிற்சிகளை நானே செய்து பார்த்து அதன் விளைவுகளை எனது உடல் மூலம் தெரிந்து கொண்டேன். இந்திய மருத்துவத் துறையில் எனக்கு இருந்த அறிவு இந்த ஆய்வுக்கு உதவியது. இறுதியாக ஆடவருக்கும் பெண்டிருக்கும் குழந்தைகளுக்கும் பல்வேறு வாழ்க்கை நிலையில் இருப்பவர்களுக்கும், பல்வேறு கால நிலைக்கும் ஏற்றவாறு சில பயிற்சிகளை ஒழுங்குபடுத்தியுள்ளேன்.

இந்தப் பயிற்சிகளை ஒழுங்காகச் செய்வதால் உடலுக்குள் பிராணவாயு பரவி என்டோக்கிரின் சுரப்பிகள் இயக்கத்தை ஒழுங்குபடுத்தி, இரத்தத்தைச் சுத்தப்படுத்தி அதன் ஓட்டத்தை ஒழுங்குபடுத்துகிறது. நோய் வராதபடி தடுப்பு நிலையை அதிகப்படுத்துகிறது. ஆரோக்கியமான உடம்பும் நீடித்த ஆயுளும் உண்டாகிறது. அதன் மூலம் ஆன்மீகத் தேட்டத்தில் வெற்றி பெற்று நாம் இந்த மண்ணுலகுக்கு எதன் பொருட்டு வந்தோமோ அதைத் தெளிவாகத் தெரிந்து கொள்கிறோம்.

இந்தப் பயிற்சிகளை ஒழுங்காகச் செய்பவர்கள் நிச்சயம் நன்மை அடைவார்கள். எளிய முறைக் குண்டலினி யோகப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளவர்கள் இந்தப் பயிற்சிகள் செய்து பழகுவதன் மூலம் பெரும் அளவில் நன்மை அடையலாம். இந்தப் பயிற்சிகள் அதற்கு அதிக அளவு உதவியாய் இருக்கும்.

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்..

தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

* * * * * * * * * * * * * * * * * * * * * * * *

 

 

“உடற்பயிற்சி, தவம் இரண்டும் பாவப் பதிவுகளை

எல்லாம் போக்க வல்லவை”.

ஆசான் சிறப்பு:

“உடல் வளர்த்துக்காத்து வாழ்வளிக்கும் மேலாம்

உணவினை வேளாளர் அளித்துலகம் காப்பார்

உடலுக்கும் அறிவிற்கும் ஒழுக்கம் காட்டி

உயர்த்தி வாழ்வின் வளத்தை ஆசான் காப்பார்.”

உயிர் விளக்கம் :

“உடல் உயிர் இரண்டிற்கும் வித்தே மூலம்

உட்பொருளே மெய்ப்பொருளாம் உண்மை தேர்வீர்


உடல் என்ப தணுக்கள் பலசேர்ந்த கூட்டு

உயிர் என்பதோ அணுவின் நுண்துகள் ஆம்;

உடல் ஊடே உயிர் சுற்றிச் சுழன்றியங்க

உணர்ச்சி யென்ற விளைவுண்டாம் அறிவு ஈதே,

உடலை விட்டு உயிர் பிரிந்தால் அறிவங்கேது

உடல் வாழ்விற்குள் தான் இன்பம் துன்பம்.”

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்..

– தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

NEXT      :  மார்ச் 03 : சாதனை வழி

PREV      : மார்ச் 01 : உலக சமுதாய சேவா சங்கம் 

நாளொரு நற்சிந்தனை:



Like it? Please Spread the word!