x

பிப்ரவரி 25 : ஞானம் – பக்தி – மாயை – முக்தி

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்!!


ஞானம் – பக்தி – மாயை – முக்தி :

ஒரு குழந்தைக்குத் தகப்பன் யார்? என்ற உண்மையை பொதுவாகத் தாயார் அறிந்துள்ள நிலையைப் போன்று, மற்றவர்களால் அறிந்து கொள்ள முடியாது.இது போன்று ஒரு தத்துவத்தைச் சந்தேகமற, மாறமுடியாத, மாற்ற முடியாத வகையில் அறிந்து கொண்ட திட நிலை “ஞானம்” எனப்படும்.

வளர்ப்போர் சொல்லிக் கொடுத்ததைத் திருப்பித் திருப்பிச் சொல்லும் கிளியை போன்று, தன் தாயார் சுட்டிக் காட்டிய ஒருவன் தான் தனது தகப்பன் என்று உறுதியாகச் சொல்லும் மகனின் மனோ நிலையோர்களால் எழுதப்பட்டுள்ள கருத்துக்களே சரியென நம்பி உறுதி கொண்டிருக்கும் நிலையும் இம்மாதிரியே.

கற்பனை வேகத்தால் இயற்கையை மறந்து, சமூகத்தின் அமைப்பையும், மக்களின் எண்ணம் செயல்களால் விளைந்து வரும் விளையப் போகும் நிகழ்ச்சிகளையும் மறந்து, உடலளவின் தேவையையும் அறிவுக்கு அந்தச் சமயப் பொருத்தத்தையும் ஞாபகத்தில் கொண்டு, புலனறிவின் எல்லையிலேயே மட்டும் விரிந்து, மயக்க நிலையில் எண்ணிச் செயலாற்றுவது “மாயை” எனப்படுகிறது.

எள்ளுக்குள் எண்ணையைப் போன்று பிரபஞ்சம் எங்கும் எல்லாவற்றிலும் நீக்கமற நிறைந்து நின்று இயங்கும் ஆன்மா, ஜீவன், கடவுள், இயற்கை, சக்தி என்று பலவாறாகச் சொல்லப்படும் அரூப சக்தி நிலையை அறிவால் அறிந்து, வாழ்வில் அமைதி பெறுவதே, அறிவில் தெளிவு பெறுவதே, “முக்தி” எனப்படும்.

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்..

தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

******************************************

 

 

“மெய்ப்பொருளாக இருப்பது இறைஆற்றல்;

அதனுடைய அசைவாக இருப்பது பரமாணு.

அதனுடைய கூட்டமாக இருப்பது தோற்றம்”.

“எந்தப் பொருளைப் பார்த்தாலும் ‘தோற்றம்,

அணுக்கூட்டு, பரமாணு, அதனுள் மெய்ப்பொருள்,’

என்று பார்க்கப் பழகிக் கொள்ளுங்கள்”.

“அறிவு அறிவுக்கு அடிமையாவதே பக்தி.

அறிவை அறிவால் அறியப்பழகுதல் யோகம்.

அறிவை அறிவால் அறிந்த நிலையே முக்தி.

அறிவை யறிந்தோர் அன்பின் அறமே ஞானம்.

ஞானம் தேடும் பக்தர்கள்:

“தேடுகின்ற பொருள் என்ன, ஏன் நமக்கு,

தெரிந்தவர் யார், கிடைக்குமிடம்எது, ஈதெல்லாம்

நாடுகின்ற வழக்கம் சிலபேரே கொள்வார்

ஞானமதைத் தேடும் சிலர் இதை மறந்து

ஓடுகின்றார் உருக்கமுடன் தேடுகின்றார்;

ஒடுங்கி நின்று அறியும் அதை விரிந்து காணார்

வாடுகின்றார்; உளம்நொந்து இருளைத்தேட

விளக்கெடுத்து போவதைப்போல முரண்பாடன்றோ”.

“வணங்கி வந்தேன் கற்பனையால் தெய்வத்திற்கு

வழக்கமாய் தொடர்ந்து வந்த பழக்கத்தாலே,


வணங்குபவன் உரியபொருள் வரும்பயன்கள்

வணங்கும் போதாராய்ந்தேன், வணக்கம்விட்டேன்

வணங்குகிறோம் ஒன்றை நமக்கு உயர்ந்ததாயும்

வாழ்வளிக்கும் ஒன்றாயும் நினைத்துக்கொண்டு.

வணங்குபவன் வலிமைபெற்று உயர்வடைந்தால்

வாழ்வினிலே கடமைசெயல் உயர்வாய்க் காணும்”.

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்..

– தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

NEXT      : பிப்ரவரி 26 : கடவுள் எங்கே இருக்கிறார்?

PREV      : பிப்ரவரி 24 : குடும்பம் அமைதி பெற

நாளொரு நற்சிந்தனை:



Like it? Please Spread the word!