x

பிப்ரவரி 18 : உலகையே வசமாக்கலாம்

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்!!


உலகையே வசமாக்கலாம் :

தேவையும் விருப்பமும் உடையதே சீவ இனம் அனைத்தும். உன் தேவையை முடிக்க முயலும் போது பிறர் தேவையும் விருப்பமும் தாக்கப்படாமல் இருக்க வேண்டும். மேலும் உனது உடல் மிக நுட்பமாக உனக்கு உயர் வாழ்வு அளிக்கவே இயற்கையால் நீண்ட காலமாகப் பல தலைமுறைகளாக வடிவமைக்கப்பட்டது.

உன் எந்த எண்ணம் அல்லது செயலாலும் உனது உடலில் உள்ள எந்த உறுப்பும் நலியாமளிருக்கப் பார்த்துக் கொள்ள வேண்டியது. எந்த உயிருக்கும் அதன் துன்பத்திலிருந்து விடுபட இயன்ற வழியில் அளவில் உதவி செய்து கொண்டேயிருக்க வேண்டும்.

இவ்வாறான மனிதன் கடமையில் தவறும் போது மூளை செல்களின் அமைப்பும் உடல் உறுப்புகள் செல்கள் இவற்றின் அடுக்குகளும் சீர்குலைகின்றன. இதனால் தான் மனதில் உடலில் துன்பங்கள். இவற்றை உணர்ந்து திருத்திக் கொள்ளும் வாய்ப்பே குண்டலினியோகம்.

உடலிலே, மூளையிலே எற்பட்டுவிட்ட சீர்குலைவு வாழ்வில் பல்வேறுபட்ட குறைகளாக மலருகின்றன. இக்குறைகள் கருமூலம் உங்கள் குழந்தைகளுக்கும் தொடர்கின்றன. தவமும், அறமும் ஆற்றித்தான் இந்த உடல் அணு அடுக்குகளை சீர் செய்ய முடியும்.

எந்தக் குறையும் உங்கள் செயலின் பதிவே என்று உணர்ந்து ஏற்றுக்கொண்டு சிந்தனையாலும் அறவழியாலும் சீர் செய்ய முயலுங்கள். உங்கள் குறை தீர்க்க நீங்கள் முயலாவிடில் வேறு யாராலும் முடியாது. பிறர் மூலம் உங்கள் குறை முடிய எதிர்பார்க்கவே வேண்டாம்.

ஒரு விருப்பத்தில்
1] தேவையின் நீதி,
2] அளவு,
3] தன்மை,
4] காலம்
என்ற நான்கு உறுப்புகள் உள்ளன. எல்லாருடைய விருப்பமும் என் விருப்பத்தையொட்டியே இருக்க வேண்டுமென்று நினைப்பது மனித மனத்தின் தவறுகளில் தலையாயது.

பொறுமை, விட்டுக் கொடுத்தல், தியாகம் என்ற மூன்றையும் இடம் காலம் தொடர்பு கொள்ளும் மக்கள் இவற்றிற்கேற்ப பயன்படுத்தினால் உலகையே நீ உன் வசமாக்கிக் கொள்ளலாம். பிறரிடம் உள்ள திறமையை எண்ணிப் பார்ப்பது அவர்களோடு எவ்வாறு பழகுவது என்பதை வகுத்துக் கொள்ள உதவும். வெறுப்பு கொள்வதற்கு அல்ல.

பிறரிடம் உள்ள நல்லவைகளை நினைந்து நினைந்து பாராட்டு. நன்றி செலுத்து. இங்குதான் உனக்கு அமைதியும் நிறைவும் உண்டாம். இவற்றையெல்லாம் தெரிந்து கொண்டால் போதாது. பழக்கத்தில் கொண்டுவந்து வெற்றி பெறு.

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்..

தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *

“கர்மம் = செயல் அல்லது வினை”.

“யோகம் = ஒன்றுபடுதல்”.

சீராக வாழ்வோம்:

“தேவை, பழக்கம், சூழ்நிலை, பிறர் மனத்தூண்டல் மற்றும்

தேவையால் எழுந்ததொரு கருவமைப்பு, தெய்வீகம் என்ற ஆறும்

தேவைகளாம் எண்ணமாய் மலர்தல் கண்டு சிந்தித்துத்

தேவைகளை அளவுமுறை அறிந்து கொள்வோம்; சீராக வாழ்வோம்.”


சேர வாரீர்:

“பல நாட்கள் தவம் செய்து, கனல் மிகுந்த

பக்குவமும் தனையறிந்த நிலையும் கொண்டு

நலமொன்றே பலனான ஞானமார்க்கம்

நாடிநிற்கும் எவர்க்கும் அவர் அறிவிற்கேற்ப

சில நாளில் சீவனையே சிவனாய்க் காணும்

சிந்தனையின் சிகரத்தில் கொண்டு சேர்த்து

உலக சமாதானப் பெரும் திட்டம் காட்டி

உயர்ஞானம் உணர்த்துகின்றேன் கொள்வீர், வாரீர்.”

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்..

– தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

NEXT      :  பிப்ரவரி 19 : ஆன்மநேய ஒருமைப்பாடு

PREV      :  பிப்ரவரி 17 : வாழ்வில் நிறைவு பெற வழி

நாளொரு நற்சிந்தனை:



Like it? Please Spread the word!