x

நவம்பர் 13 : ஆன்மாவின் மூன்று நிலைகள்

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்!!


ஆன்மாவின் மூன்று நிலைகள்

காமதேனு :
தேனு என்பது பசு. ஆன்மீக உலகில் பசு என்ற சொல் ஆன்மாவைக் குறிக்கும். காமம் என்பது இச்சையைக் குறிக்கும் சொல். காமதேனு எனில் இச்சையை இயல்பாக உடைய ஆன்மா என்று பொருள். உடல் வரையில் எல்லை கட்டி புலன்கள் வழியே புறப்பொருள் கவர்ச்சியால் ஈர்க்கப் பெற்று ஆன்மா செயல் புரியும் போது விளைவுகள் பெரும்பாலும் சலிப்பும் துன்பமும் தரும். இவ்வகையில் இச்சைக்கே ஆன்மாவின் ஆற்றல் பயன்படும். முதல் கட்டம் காமதேனு.

கற்பகம் :
கற்பு + அகம் என்ற சொற்களின் இணைப்புத்தான் கற்பகம். இங்கு ஆன்மா உயிர் வரையில் உணர்ந்து விரிந்து ஆற்றும் தகுதி பெற்ற நிலை. இச்சித்து, இச்சித்து, துய்த்துத் துய்த்து சலிப்பும் துன்பமும் பெற்ற ஆன்மா சிந்தனையில் ஆழ்கின்றது. புற இயக்கம் விடுத்து தன்னடக்கம் உண்டாகி உயிர் நிலையின் சிறப்பை அறிகின்றது. அறிவைப் படர்க்கை ஆற்றலாகவே அறிந்து கொள்கிறது. விளைவறிந்து செயலாற்றும் தகைமை ஓங்குகிறது. செய்யத்தக்கன, தகாதன இவற்றை விளங்கி, விளக்க வழியில் தன்தேவை, பழக்கம் இவற்றை ஒழுங்குபடுத்திக் கொள்ளுகிறது. இந்த அளவில் அறிவு உறுதிபெற்ற போது ஒழுங்கும் இயல்பாகின்றது. உறுதியும் ஒழுக்கமும் பெற்ற ஆன்மாவின் அந்த மதிப்புள்ள உயர் நிலைதான் கற்பு + அகம். அகம் என்றால் உள்ளம். கற்பு எனில் உறுதியும் ஒழுக்கமும் பெற்ற நிலை. இது ஆன்மாவின் வளர்ச்சி நிலையில் இரண்டாவது கட்டம்.

சிந்தாமணி :
சிந்தை மணியான நிலை. அதாவது சலனமற்று, புலனடக்கம் பெற்று, உறுதி பெற்ற நிலை. தன் உயிர் நிலை உணர்ந்தபின் அங்கு கிட்டிய ஆற்றலால் உயிருக்கு மூல நிலை அறியும் ஆர்வம் எழுகின்றது. சிந்தனை உயர்ந்து உயிர் விரைவைச்சிறிது சிறிதாகத் தவத்தின் மூலம் குறைத்துக் கொண்டே போய் முடிவாகத்தான் இயக்கமற்ற அமைதி நிலையைப் பெறுகின்றது. மெய்ப் பொருளாகி விடுகின்றது. தனது இருப்பு நிலை அணு முதற்கொண்டு அண்டங்கள் அனைத்துக்கும் அப்பாலுள்ள பெருவெளி வரையில் நிறைந்து இருக்கும் பெருமையினை உணர்ந்து கொள்கின்றது.
தேவைக்கும் இருப்புக்கும் இடையே உள்ள தெய்வீகத் தொடர்பும் அதன் ஒழுங்கமைப்பும் உணர்ந்து ஆன்மா முழு அமைதி பெறுகின்றது. இந்த நிலைதான் சிந்தாமணி. இதுதான் மனிதனின் முழுமைப்பேறு. இதற்கு ஆன்மா தன்னையறிய வேண்டும். அப்போது தான் அமைதி பிறக்கும்.

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

*************************************

 

 

அறிவின் நான்கு நிலைகள் :

“அறிவறிய வேண்டு மெனில் புலன் கடந்து

அறிந்துள்ள அத்தனையும் கடந்து நின்று

அறிவிற்கு இயக்ககளப் பொருள் பரம


அணுவான உயிர்நிலையை உணரவேண்டும்;

அறிவங்கே உயிராகும் துரியமாகும்

அந்நிலையும் கடந்துவிடத் துரியாதீதம்

அறிவிந்த நான்கு நிலைகளில் அவ்வப்போ

அனுபவமாய் நின்று நின்று பழக வெற்றி”.

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்..

– தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

NEXT      :  நவம்பர் 14 : கர்ப்பகாலப் பொறுப்புகள்

PREV      :   நவம்பர் 12 : தாத்தாவும் பேரனும்

நாளொரு நற்சிந்தனை:



Like it? Please Spread the word!