x

நவம்பர் 12 : தாத்தாவும் பேரனும்

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்!!
தாத்தாவும் பேரனும் :
தத்துவங்களை புரிந்து கொண்டால் நம் வாழ்க்கையில் நடைபெறக் கூடிய எல்லா நிகழச்சிகளுக்கும் அர்த்தம் புரிந்து விடும். இறைநிலையைத் தாத்தா என்றால், அதிலிருந்து முதலில் தோன்றிய விண் மகன். முதல் விண்ணிலிருந்து இரண்டாவதாகத் தோன்றிய நிழல் விண்ணோ இறைவெளிக்குப் பேரன்.
பேரன் எங்கே போனாலும் தாத்தாவுடன் சேர்ந்து கொண்டான். நிழல் விண் இறைவெளியோடு கலந்துவிட்டது தான் காந்தம். அப்படியானால் தாத்தாவும் பேரனும் அதாவது இறைவெளியும் நிழல் விண்ணும் ஆடும் கூத்து தான் பிரபஞ்சம்.
இறைவெளியில் நிழல் விண்கரைந்த நிலை காந்தம். காந்தம் தான் அழுத்தமாக, ஒலியாக, ஒளியாக, சுவையாக, மணமாக, மனமாக பிரபஞ்சம் முழுவதிலும் எல்லாப் பொருளிலும் இருக்கிறது. இறைவெளி என்ற தாத்தாவும் நிழல் விண் என்ற பேரனும் ஆடுகிற கூத்து தானே இவையனைத்தும் !
இறைவெளி புலன்களுக்கு எட்டாது இருந்ததனால் அதை விவரித்துச் சொல்ல முடியவில்லை. ஆனால் எப்படித் தத்துவஞானிகள் கண்டுபிடித்தார்கள்? மனம் சுழல் விரைவு அதிகமாயிருக்கிற போது அது அலை.
அலைக்கு அடித்தளமாக இருப்பது இறைநிலை. இறைநிலையிலிருந்து அலை விலகி நிற்கிற மாதிரி இருக்கும். ஆனால், மன அலைச் சுழல் விரைவு குறையக் குறைய, இறையுணர்வும் இறையாற்றலும் அந்த மனத்திற்கு வலுவைத் தருகின்றன. அப்படியே அந்த இறைநிலையோடு நெருங்கியிருக்கிற போது, மனம் இறைநிலையைத் தெரிந்து கொள்கிறது.
இறைநிலையிலிருந்துதானே எல்லாமே வந்தது? எல்லா இயக்கங்களும் பதிவுகளும் வான்காந்தத்தில் (Universal Magnetism) தான் இருக்கின்றன. அதோடு மனம் இணைகிற போது அங்கிருக்கக்கூடிய உண்மைகள் எல்லாம் தெரிகின்றன. நேற்று நடந்த செயலை நினைத்தால் நினைவிற்கு வருகிறது போலத் தனக்குள்ளாகவே பிரபஞ்ச ரகசியங்கள் தெரியும்.
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்..
தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.
**************************************
பேரறிவுக்குப் பத்துப் படிகள் :
“பேரியக்க மண்டலத்தைத் தத்துவங்கள் பத்தாக விளங்கிக் கொள்வோம்
பெரிய சுமை மனதிலிருந்திறங்கிவிடும் மனம் அறிவாம் சிவமுமாகும்.
ஒரியக்கமற்ற நிலை வெட்டவெளி இருப்பதுவே ஆதியாகும்.
உள்ளமைந்த ஆற்றலே உருண்டியங்கும் விண்ணாகும் அதிலெழுந்த
நேரியக்க விரிவுஅலை நெடுவெளியில் கலப்புற வான்காந்த மாச்சு;
நிகழ்காந்தத் தன்மாற்றம் அழுத்தம் ஒலி ஒளி சுவையாம் மணம், மனம் ஆம் –
சீரியக்கச் சிறப்புகளை விளைவுகளை உள்ளுணர்ந்தால் அது மெய்ஞானம்
சிந்திப்போம் உணர்ந்திடுவோம் சேர்ந்திருப்போம் இறைநிலையோடென்றும்
எங்கும்”.
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்..
– தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.


Like it? Please Spread the word!