x

நவம்பர் 03 : மனம் என்னும் புதினம்

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்!!


மனம் என்னும் புதினம் :

மனம் எனும் ஒரு புதினப் பொருளில் பேரியக்க மண்டலத்தின் சிறப்புகள் அனைத்தும் அதன் தன்னிறுக்கச் சூழ்ந்தழுத்தும் ஆற்றலால் சுருங்கியுள்ளன. எனவே மனித மனம் தன்னைச் சிறுமைப் பொருளாக நினைத்தால் அது சிறியது. தனது மூல நிலையான பிரம்மத்திலிருந்து அதன் பரிணாமச் சிறப்புகள் அனைத்தையும் நினைந்து, தனது மதிப்பை உணரும் போது, அது மிகப் பெரிய தத்துவமாக இருக்கிறது.

பிரம்ம நிலையில் இருப்பாக இருந்த பூரணம், விரைவு, அறிவு என்ற மூன்று தன்மைகளும், அதன் இயக்கச் சிறப்புகளான – பரிணாமம், இயல்பூக்கம், கூர்தலறம் ஆகிய திறன்களும் இப்போது மனித உடலுக்குள் அமைந்து, விரிந்து, நிறைந்து ஆற்றும் சிறப்புகளையும் உணரும் போது, மனித மனத்தின் பூரண தத்துவம் விளங்குகின்றது.

மனம் தன்னைப் பற்றி உணரும் அளவே அதன் மதிப்பு ஆகும். மனம் கொடுக்கும் மதிப்பேதான் – மதிப்பின் அளவே தான் – பேரியக்க மண்டலம். இவ்வாறு மனம் விரிந்து முழுமை பெறும் போது தான், அது தன் இருப்பு நிலையான பிரம்மத்தையும், இயக்க அலையான மனதையும் ஒன்றாகக் காணுகின்றது. இந்தப் பெரும்பேறான அகக் காட்சியே “பிரம்ம ஞானம்” ஆகும். உயிரினத் தோற்றங்களின் இறுதிப் பயனே, மனித மனத்தின் மூலம் தனது முழுமையை அறிவதே ஆகும்.

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்..

தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

**************************************

 

 

தவமும் – ஞானமும்: –

“ஐம்புலன்கள் வழியாக அறிவு பலநாள் இயங்கி அலைந்தலுத்து ,

நிம்மதியைத் தேட, அந்த நிலையறிந்த குரு அருளால் நினைவு தன்னை,

இம்மென்றிருத்தி, யங்கே எழும் சோதி சுடருணர்ந்து, இன்பங் கண்டு ,

சும்மா விருக்கின்ற, முறை பழகல் தவமாகும், பயனே ஞானம்”.

பக்தியில் மயக்கம் :

“பக்தியெனும் முத்திரையின் திரைக்குப் பின்னால்

பலர் புரிந்த அநீதிகளை விளக்கப் போமோ –

புத்தி மிக்கச் சமணர்களைக் கழுவில் கொன்றோர்

புண்ணியர்கள் எனப்பட்டார் அறியாதோரால் ;

யுக்தியினால் இராமலிங்கம் உடல் மறைத்து

யோகத்தால் சோதியாகி விட்டார் என்றார்;

சக்திமிகு தில்லையந்தணர் நந்தன்போய்

தானாகத் தீரில் விழுந்தி றக்கச் செய்தார்”.


வாழ்க வையகம் வாழ்கவளமுடன்..

– தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

NEXT      :  நவம்பர் 04 : ஐந்திணைப்புப் பண்பாடு

PREV      :   நவம்பர் 02 : சமபங்கு

நாளொரு நற்சிந்தனை:



Like it? Please Spread the word!