x

டிசம்பர் 25 : வாழ்க்கை நெறி

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்!!


வாழ்க்கை நெறி :

உலகில் பிறந்து வாழ்ந்த எந்த உயிரும், எக்காலத்தும் அழிவுறுவதில்லை. வினைப்பயனாக ஏற்படும் பழிச்சுமைப் பதிவுகள், வாழ்வில் கண்ட விளக்கம், அல்லது உலக இன்பம் துய்க்கும் வேட்பு இவற்றிற்கு ஏற்ப இயங்குவதில் இடமாற்றம் பெறுகின்றன. வாழும் உயிர்களுக்கு நலமோ, கேடோ தருவனவாக அமைகின்றன.
ஆழ்ந்து மனித சமுதாயத்தின் வாழ்க்கை நிலையை அறிவு நிலையைச் சிந்தித்தோமானால் ஒவ்வொரு மனிதனுடைய உயிரும் இன்று வாழும் மக்களுடைய உயிரில் மலர்ந்து வீசிக் கொண்டிருக்கும் நினைவலைகளோடும், இது வரையில் வாழ்ந்து இறந்து போன உயிர்களில் அடங்கியுள்ள ஆற்றலோடும் தொடர்பு கொண்டு தான் இயங்குகிறது என்ற உண்மை தெளிவாகும்.

அறிவில் விளக்கம் பெற்ற மகான்கள் உலக மக்கள் அறிவை தெளிவு வழியிலும், மற்றவர்கள் மக்களை மயக்க வழியிலும் செலுத்திக் கொண்டே இருக்கின்றார்கள். இந்த இரண்டு பக்கங்களின் இழுப்புகள் எங்கெங்கு எந்த அளவு வெற்றி பெறுகின்றனவோ, அதற்கேற்ற செயல்களும் விளைவுகளும் மனித சமுதாயத்தில் காணுகின்றன. ஆயினும் விஞ்ஞான அறிவு பெற்ற பலர் மெய்ஞானம் பெருங்காலம் அண்மையில் உள்ளது. அப்போது எல்லா மக்களும் விடுதலை வழியில் வாழ்ந்து அமைதிபெற ஏற்ற சமுதாய வாழ்க்கை நெறி உருவாகிவிடும்.

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்..

தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

**************************************

 

 

(இயேசுநாதர் கருணை செயல் …)

அன்பின் ஜோதி:-

“மனித இன நல் வாழ்விற்கெனவே தன்னை

மன முவந்து அர்ப்பணித்துக் காலமெல்லாம்

புனித முறையில் அன்பின் நிலையுணர்த்திப்

பூவுலகில் ஆன்மிக ஒளிபரப்பி

தனிமனிதன் சமுதாயக் கடமை காட்டி

தரித்திரம், நோய், பஞ்சமா பாதகம் போக்கும்

கனிவுடனே உயிர் வாழ்ந்த இயேசுநாதர்

கருணை செயல் மறவாது அன்பாய் வாழ்வோம்.” (777)

உலகமே ஒரு கலாசாலை:-

“உலகமே ஒரு பழைய பள்ளிக்கூடம்

ஒவ்வொருவருக்கும் அன்றாடம் வாழ்வில்

பல புதிய பாடம் சூழ்நிலைகட்கேற்ப

பலாத்காரமாகப் போதிக்கும், என்றும்

நாம் விரும்பும் அறிஞர்பலர் செய்யும் போதம்

நல்வாழ்வில் அவர்கள் சந்தித்தாராய்ந்த

சில முக்கிய நிகழ்ச்சிகளின் விளக்கமாகும்


சிந்தனையைச் செயல்திறனை ஒழுங்கு செய்யும்.”

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்..

– தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

NEXT      : டிசம்பர் 26 : தொடரும் பதிவுகள்

PREV      :   டிசம்பர் 24 : தியாக உணர்வு

நாளொரு நற்சிந்தனை:



Like it? Please Spread the word!