x

டிசம்பர் 04 : கடமை

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்!!


கடமை :

நாம் இந்த உலகத்திற்கு வந்தோம். ஒரு நாள் இதைவிட்டுப் போகப் போகிறோம். இந்த பூமியில் நம்முடன் எதுவும் கொண்டு வரவில்லை. நாம் புறப்படும் பொழுது எதுவும் எடுத்துச் செல்ல முடியாது. ஒவ்வொருவருடைய தன்மைக்கேற்ப சூழ்நிலை சந்தர்ப்பங்களால் ஒவ்வொருவருக்கும் ஒரு கடமை ஏற்படுகிறது. ஒவ்வொரு செயலிலும் எந்த அளவு நன்மை செய்ய முடியும் என்பதை சிறிது எண்ணிப் பாருங்கள்.
உங்கள் மனதை கடமையில் செலுத்துங்கள்.

உங்கள் முயற்சிக்கு அப்பால் எது நடந்தாலும் அது இறைவனின் விருப்பம் என்று எடுத்துக் கொள்ளுங்கள். அது தான் இயற்கைச் சட்டம் நாம் பிறப்பதற்கு முன்பே அந்த ஆற்றல் இருந்து கொண்டிருக்கிறது. நாம் இறந்த பின்பும் அந்த பேராற்றல் இருந்து கொண்டிருக்கும். இதில் நாம் கவலைப்படுவதில் என்ன இருக்கறது. கவலையே கவலைப்படுவதற்கு விட்டுவிடுங்கள் !

நாம் வாழும் காலத்தில் நமக்காகவும், சமுதாயத்திற்காகவும் ஆற்ற வேண்டிய பொறுப்புகளை பெற்றிருக்கிறோம். அவற்றை நன்குணர்ந்து நல்ல முறையில் நமக்கும் மற்றவர்களுக்கும் திருப்தி தரும் வகையில் நம் கடமைகளை செய்ய வேண்டும். அதன் பிறகு மனம் அமைதியடையும். உங்கள் பிரச்சினைகளை தீர்ப்பதற்குரிய வகையில் புதுப்பிரச்சினைகள் மேலும் ஏற்படுத்தாத வகையில் பேராற்றல் பெற்று உங்கள் மனம் சிறந்து விளங்கும்.

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்..

தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

**************************************

தினக்கடன் :

“உனக்கும் நல்லதாய் ஊருக்கும் நல்லதாய்,

நினைப்பதும், செய்வதும், நித்தியக்கடன்.”

கடவுளும் கடமையும் :

“கடவுளை உணர்ந்தோர் கடவுளை நாடுவார்

கடவுளை அறிந்தோர் கடமையில் வாழுவார்.”

மரணத்திற்கு அஞ்சாத கடமை :

“மரணத்தை எதிர்நோக்கப் பிறந்த நாமோ

மதிப்பிலே இன்பதுன்பம் அனுபவித்து

மரணமென்ற இரத்த ஓட்ட நிறுத்தத்தின்பின்

மறந்துவிடுவோம் பின்னர் ஒன்றைப் போவோம்;

மரணத்திற்கிடையே நம்தேவை எல்லாம்

மனித இனக் கூட்டுறவால் கிடைக்கக் கண்டோம்

மரணத்திற் கஞ்சாமல் மறந்திடாமல்

மதி உடலின் இயல்பறிந்து கடமை செய்வோம்.”

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்..


– தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

NEXT      :  டிசம்பர் 05 : பிரமச்சரியமும் ஞானமும்

PREV      :  டிசம்பர் 03 : கருமையப் பதிவுகள்

நாளொரு நற்சிந்தனை:



Like it? Please Spread the word!