x

ஜூலை 27 : உறக்கம்

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்


உறக்கம் :

“இப்பொழுது ஒரு பத்து விதைகளைப் போட்டு இருப்பதாக வைத்துக் கொள்ளுங்கள். ஒரே மண்; ஒரே தண்ணீர். ஆனால் அந்தப் பத்து விதைகளும் விதைகளிலே இருக்கக்கூடிய தன்மைக்குத் தக்கவாறு இந்த தண்ணீரையும் இந்த மண்ணிலேயிருந்து அவை எடுக்க வேண்டிய அணுக்களையும் எடுத்துக் கொண்டு, வேப்பம் விதை என்றால் வேப்பஞ்ச் செடியே தான் முளைக்கும். கரும்பு என்றால் கரும்பு தான் வரும். மாங்காய் என்றால் மாங்காய் தான் வரும்.

அது போலவே நமது உடலும், உயிர்ச்சக்தியை ஈர்த்துக் கொண்டு சேமிக்கவும் செலவிடவும் செய்கிறது. வரவு, செலவு இரண்டுக்கும் மத்தியிலே இருப்பு (Stock) ஒன்று எப்போதும் இருக்கும். அந்த இருப்பு மிகவும் குறைவாகப் போய்விட்டால் சோர்வு வரும், நோய் கூட வரும். நாள் முழுவதும் நாம் ஏதாவது பணி செய்து கொண்டிருப்பதால் மாலை நேரமானால் அந்த இருப்பு (Stock) குறைந்திருக்கும் பொதுவாக, அந்த இருப்பை அதிகரிக்கச் செய்வதற்குத் தான் உறக்கம் வருகிறது. உறங்கும் போது என்ன நிலைமை என்றால் மன இயக்கம் இல்லை; உடலியக்கம் மாத்திரம் நடக்கிறது. இரண்டிலே ஒரு இயக்கம் தவிர்க்கப் படுவதால் உயிர்ச்சக்தி சேமிக்கப்படுகிறது. காலையிலே அந்தச் சேமிப்பு சரியான இடத்துக்கு வருகிறபோது அதனுடைய திணிவு, அதாவது அழுத்தம் (Intensity), போதிய அளவு வந்து விட்டதானால் நரம்பு மண்டலத்திற்கு இயல்பான தொடர்பு (Automatic reconnection) மீண்டும் வந்து விடுகிறது, நாம் கண்விழித்து எழுகிறோம்.

பெரியவன் அங்கே இருக்கிறான், எங்கும் நிறைந்த ஒரு சக்தியாக இருந்து கொண்டு காலத்தாலே இணைப்பை துண்டித்து (disconnecting) காலத்தாலே மீண்டும் இணைப்பு (reconnecting) ஏற்படுத்துகிறான். கூலி மட்டும் நாம் கொடுக்கிறதே இல்லை.

இம்மாதிரி ஒரு சக்தி இப்படி இருந்துகொண்டு என் உடலிலே இத்தனை வேலையும் செய்து கொண்டே இருக்கிறது என்பதை நினைத்தாலே போதும். அதற்கப்புறம் அந்த நினவுக்குள்ளாகவே ஓடி அவனே வந்து “நீயேதான் நானாக இருக்கிறேன்; நானே தான் நீயாக இருக்கிறாய்” என்று சொல்லுவான்.”

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

– தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

* * * * * * * * * * * * * * * * * *

உண்மை நிகழ்ச்சிகள்:

“பிறக்கின்றோம், வளர்கின்றோம், வாழ்கின்றோம் நாம்

பேருலகில் இன்பதுன்பம் அனுபவித்து

இறக்கின்றோம். இதுவேதான் என்றும் என்றும்

எல்லா ஜீவன்களுக்கும் பொது. இவ்வுண்மை

மறக்காத விழிப்புடனே, ஒழுக்கத்தோடு,

மதி உடலைப் பயன்படுத்தி உலக வாழ்வைச்

சிறப்பாக அனுபவித்து, இயற்கைக் கொப்ப


சிந்தனையில் அமைதி பெற முயற்சி செய்வோம்”.

“ஐந்து புலன்களையும் அடக்கி புருவத்திடையே

அறிவினது மூலத்தை ஆழ்ந்து நோக்கி அமர;

சிந்தை அடங்கிடும் சீவனே சிவனாகும்

சிறுகச் சிறுகப் பயின்றால் சித்திக்கும் உண்மை நெறி”.

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

– தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

NEXT      :  ஜூலை 28 : தன்னையறிய தனக்கொரு கேடில்லை

PREV      :   ஜூலை 26 : தாய் சேய் நலம்

நாளொரு நற்சிந்தனை:



Like it? Please Spread the word!