x

ஜூலை 06 : அலையின் தொடர்பு

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்


அலையின் தொடர்பு :

“தூய்மையான நல்எண்ணங்களை மேற்கொண்டால் உங்களிடமிருந்து இனிய அதிர்வுகள் புறப்பட்டு வெளியேறிப் பரவுகின்றது. அதேபோன்று நீங்கள் ஒருவரை வாழ்த்த நினைக்கும் பொழுது உங்களை அறியாமல் நீங்களே முதலில் உங்களால் வாழ்த்தப்படுகின்றீர்கள். வாழ்த்து உங்கள் மனதில் ஆழப்பதிந்துவிடுகின்றது.

அதுபோலவே நீங்கள் ஒருவருக்கு தீமை நினைத்து சபிக்கும் பொழுது முதலில் உங்களை நீங்களே கெடுவதற்கு சபித்துக் கொள்கிறீர்கள். உங்களிடம் முதலில் தீமை வித்து உங்களிடம் ஊன்றி பிறகு மற்றவர்களுக்குப் பரவுகின்றது. இதை நன்கு புரிந்து கொள்ள வேண்டும். இதற்கு உதாரணமாக கோபம் ஏற்படும் போது உண்டாகும் நிலையினைச் சொல்லலாம். கோபம் முதலில் உங்கள் உடலுக்கும் மனதிற்கும் பாதிப்பு செய்துவிட்டுத் தான் மற்றவரை சென்று தாக்கும் என்பதை நீங்கள் அனுபவத்தில் உணர்ந்திருக்கலாம்.

நீங்கள் மற்றவர்களை வாழ்த்த ஆரம்பிக்கும்பொழுது நல்ல அலைகளை ஏற்படுத்தி உங்கள் குணத்தை வளப்படுத்துகிறீர்கள். உங்களுடைய வாழ்த்து மற்றவரிடம் மோதித் திரும்புகிறது. சிதறுகிறது, ஊடுருவிச் செல்கிறது. நீங்கள் யாரை வாழ்த்துகிறீர்களோ அவரை முடிவில் சென்றடைகிறது. இந்த முறையில் வாழ்த்து உங்களுக்கும் நீங்கள் வாழ்த்துகின்ற மனிதருக்கும் இடையே மட்டுமல்லாமல் அந்த இனிமையான அலைகள் மனித சமுதாயம் முழுதும் பரவுகின்றன. பேரியக்க மண்டலம் முழுதும் அனைத்து பக்கங்களிலும் சென்று நிரம்புகின்றன.”

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

– தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

* * * * * * * * * * * * * * * * *

 

“எந்தப் பொருளை எடுத்தாலும், அணு முதல்

அண்டங்கள் ஈறாக அது சுழன்று கொண்டேயிருப்பதனாலே அலை என்பது

தோன்றிக் கொண்டேயிருக்கிறது”.

“நுணுக்கமான ஓர் அணுவாக ஒடுங்க மனதினால்

முடியும். அதே நேரத்தில் இந்தப் பேரண்டமாகவும்

விரிந்து நிற்கவும் மனதினால் முடியும்”.

“மனதின் அடித்தளம் இறை நிலை :

“அலை அலையாய் இயங்கும் மனத்தடித்தளமே நிலை பொருள்

அது தெய்வம் கடல் போன்று அலை போன்றதே மனம்;

நிலை பொருளாம் இருப்பு சிவம் நித்தியம் என்றோதிடும்

நெடுவெளி உன் அறிவாகும், உனது அலையே மனம்;

கலையுணர்வால் மெய்ப் பொருளாம் கண்காணா ஒன்றினைக்


கண் காத்து மூக்கு முகம் குணம் உருவம் புகுத்தியே

சிலையுருவில் காட்டி சொன்ன கதைகளில் மயங்கி நாம்

சிக்கியுள்ளவரை உண்மை நிலை விளங்காதுணருவோம்”.

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

– தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

NEXT      : ஜூலை 07 : அன்பு – பாசம்

PREV      :  ஜூலை 05 : மன்னிப்பின் மேன்மை

நாளொரு நற்சிந்தனை:



Like it? Please Spread the word!