x

ஜூலை 01 : ஊனுடம்பே ஆலயம்

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.


ஊனுடம்பே ஆலயம் :

“உடலும் உயிரும் இசைந்து இணங்கி இயங்கும் நிலையில் இணைக்கப் பெற்று வாழ்ந்து வருபவன் மனிதன். அற்புதமான தொகுப்பாக உள்ள உடல் அமைப்பு, வியத்தகு ஆற்றல்களை உள்ளடக்கமாகக் கொண்ட உயிர்ச்சக்தி, குறுகியும், விரிந்தும், நுணுகியும் இயங்கத்தக்க அறிவுத்திறன் இவை இலட்சக்கணக்கான ஆண்டுகளாகக் கருமூலம் பிறவித் தொடராக மேலும் மேலும் சிறந்து மிகவும் உயர்ந்த நிலைமை எய்தியுள்ளன.

ஒரு உயர்ந்த குறிக்கோளோடு மனித உயிர்கள் இவ்வுலகுக்கு வந்துள்ளன. மன உணர்வை விரிந்த அளவில் வளர்த்துக் கொள்ளவும், அறிவில் முழுமை பெற்று இயற்கையை உணர்ந்து, ரசித்து அதனோடு ஒன்றி வாழ்ந்து நிறைவு பெறும் நிலையான அமைதியைப் பெறவும் உள்நோக்கமாக அமைந்துள்ளதே மனித உயிர்.

அறிவின் உயர்வு பெற்று உயிரின் மதிப்பும் சிறப்பும் உணர்ந்து நிறைவு பெறுவதே மனிதப் பிறவியின் நோக்கமெனினும் அது வெற்றிபெற உடலை நலமோடும் வளமோடும் வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம்.”

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

– தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

* * * * * * * * * * * * * * *

 

 

“உள்ளத்தின் களங்கமாகிய நோய்களும்,

உயிரின் களங்கமாகிய வாழ்க்கைச் சிக்கல்களும்

கவலையாக மாறுகிறது”

“உடலுக்கும் உயிருக்கும் நட்பு நீடித்தால் ‘வாழ்க்கை’ என்கிறோம்.

பிரிவு ஏற்பட்டால் ‘மரணம்’ என்கிறோம்”.

“உடலில் இரசாயன் மாற்றம் ஏற்படுவதில்

நமது எண்ணம் பெரும் பங்கு வகிக்கிறது”.

“தீய எண்ணங்கள் உள்ளத்தைக் கெடுப்பது போலவே

உடலையும் கெடுக்கின்றன”.

“அகங்காரம், கோபம், சுயநலம், தர்மம் செய்யாமல் இருப்பது, துரோகம்

செய்வது, போன்றவற்றைத் தவிர்த்தால், மனிதனின் ஆயுள் அதிகரிக்கும்”.

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

– தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

NEXT      : ஜூலை 02 : ஆன்ம நிலை அறிவது ஏன்?


PREV      :  ஜூன் 30 : கணவன் – மனைவி நட்பு

நாளொரு நற்சிந்தனை:



Like it? Please Spread the word!