x

ஜூன் 29 : அமைதி நிலைக்க

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.


அமைதி நிலைக்க :

“உயிரினங்கள் எல்லாவற்றிலும் மனிதன் சிறந்தவன். பிறர்படும் துன்பத்தைக் கூர்ந்துணரும் நுண்ணறிவு மனிதனுக்கே சிறப்பாக அமைந்துள்ளது. வருந்துவோர்களிடம் இரக்கம் கொண்டு உதவி வாழும் தகைமை மனிதனுக்கே உண்டு. வாழ்க்கைக்குத் தேவையான பொருட்கள் பல. எனினும் அவற்றை விரைவாகவும் எளிதாகவும், பெருத்த அளவிலும் உற்பத்தி செய்து கொள்ள ஏற்ற இயந்திர விஞ்ஞான அறிவிலும் நாளுக்கு நாள் மனிதன் முன்னேறிக் கொண்டு வருகிறான்.

எனினும் மனித சமுதாயத்தில் ஏன் அமைதி இல்லை. மனிதரிடையே அச்சம், பிணக்கு, பகை, போர் இவை ஏன் அடிக்கடி ஆங்காங்கு எழுகின்றன. வாழ்வைச் சீர்குலையச் செய்கின்றன. மனித மன இயல்பையும் விளைவுகளையும் அடிப்படையாகக் கொண்டு சிந்தித்தே இதற்கு முடிவு காண வேண்டும்.

மனிதனுக்கு நான்கு வித தேவைகள் உண்டு.

1) உணவு, உடை, உறைவிடம், பருவத்தே பால் உறவு, இவை காலத்தோடும், தேவை நிறைவு பெரும் அளவிலும் கிடைக்க வேண்டும்.

2) பலவாறாக அமைந்த இயற்கை அழகுகளையும் காட்சிகளையும் கண்டு களிக்கும் வாய்ப்பு வேண்டும்.

3) இயற்கை இரகசியங்களை அறியவும், பிறர்க்கு உணர்த்தவும் வாய்ப்பும் சூழ்நிலையும் வேண்டும்.

4) பிரபஞ்ச இயக்கத்திற்கும் தனக்கும் மூல ஆற்றலை அறிய வாய்ப்பும் சூழ்நிலையும் வேண்டும்.

காலத்தோடும் முறையோடும் தேவைக்கேற்ப இந்நான்கு வகையும் கிட்டாத போது அவன் அறிவு, உடல் ஆற்றல்கள் திசை மாற்றம் பெறுகின்றன. போட்டியுணர்வும், பிறர் வளம் பறித்து வாழும் பழிச் செயல்களும், பாதுகாப்புப் பொறுப்பும் மிகுதியாகின்றன. அச்சம், பகை, பிணக்கு, போர், இவையாக உருப் பெறுகின்றன. இத்தேவைக்குரிய பொருட்களையும் வசதிகளையும் ஈட்டவும், காக்கவும், துய்க்கவும், பிறர்க்கு உதவவும் உலகில் பிறந்த எல்லோருக்கும் உரிமையுண்டு. இதுவே பிறப்புரிமை எனப்படும்.

இந்த உரிமையை பிறர் தடுக்காமலும், பறிக்காமலும் காக்க அமையும் சமுதாயப் பாதுகாப்புச் சூழ்நிலையே சுதந்திரம் ஆகும். உலகில் வாழும் மக்கள் எல்லோருக்கும் இந்தத் தெய்வீகமான பிறப்புரிமையும், சுதந்திரமும் ஒவ்வொருவருக்கும் கிடைத்தால் தான், உறுதி செய்யப்பட்டால் தான் மனிதன் வாழ்வில் அமைதி கிட்டும். அது நிலைக்கவும் முடியும்.”

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

– தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

* * * * * * * * * * * * * * *

“விளைவறிந்த விழிப்போடு துன்பம் வராமல்

காக்கும் செயல் முறையே அறமாகும்”.

“தவறு செய்தால் இன்றோ நாளையோ அறிவிற்கோ

உடலுக்கோ துன்பம் விளையும் என்பது தெரிவதில்லை”.

அமைதி இயல்பாகும்:

“அகத்தவமும் அறநெறியும் இணைந்து ஓங்க

ஆன்மாவின் வேண்டாத பதிவு நீங்கும்

இகத்துறவு அத்தனையும் இனிமைநல்கும்

எப்போதும் மன அமைதி இயல்பதாகும்;

மிகத்தெளிவு உண்மையுமாம்; இந்த உண்மை


மீறி எழும் பழவினையில் மறைந்துநிற்கும்

தொகுத்துணர்வாம் விரிந்த மனத் தொடர்முயற்சி

சுய நிலையம் மெய்ப் பொருளாய்த் தன்னைத்தேரும்.

நிறை நிலையில் அமைதி :

“எல்லை கட்டும் மனநிலையில் இன்ப துன்பம்

இரவு பகல், சிறிது பெரிது, ஆண் பெண், கீழ் மேல்,

நல்லதுவும் அல்லதுவும், நாணம், வீரம்,

நட்டம் லாபம் என்ற அனைத்தும் தோன்றும்;

வல்லமையும் அதன் முழுமை நிலையாய் உள்ள

வரைகடந்த மெய்ப்பொருளாம் அகத்துணர்ந்தால்

அல்லலற்று அறிவு விழித்தும் விரிந்தும்

அறிவறிந்த நிறைநிலையில் அமைதி காணும்.

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

– தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

NEXT      :   ஜூன் 30 : கணவன் – மனைவி நட்பு

PREV      :    ஜூன் 28 : புலன் வழி அறிவு

நாளொரு நற்சிந்தனை:



Like it? Please Spread the word!