x

ஜூன் 26 : அறிந்தது சிவம், மலர்ந்தது அன்பு

வாழ்க வளமுடன் வாழ்க வையகம்.


அறிந்தது சிவம், மலர்ந்தது அன்பு :

“இறைவனிடம் ஏதோ பெறவேண்டும் என்று நினைக்கிறபோது அது உணர்வு தான் – அவனே தான் இந்த நிலையிலே சிக்கிக்கொண்டு அந்தந்த இடத்துக்குத் தக்கவாறு இன்பத்தையும் அனுபவிக்கிறான் துன்பமும் அடைகிறான். அந்த இடத்தில் நான் அந்த துன்பத்தை நீக்கவேண்டும் என்ற கருணையானது உள்ளத்திலே எழுமேயானால் அதுதான் உறவு. அந்த உறவை உண்மையான உறவை அவனோடு கொண்ட போது அதிலிருந்து அறம் எப்படி உண்டாகிறது? சேவையாக உண்டாகிறது. அப்பொழுது அறிந்தது சிவம். இங்கே என்ன? காட்டுவது அன்பு. சிவம் என்ற ஒரு நிலையை அறிவு உணர்ந்தது அது செயல்படும் போது அன்பாக மலர்ந்தது.

அப்பொழுது அன்பு என்பது என்ன என்று பார்க்கும்போது சிவத்தின் செயலே. பூரணமாக சிவத்தின் செயலே. செயலிலே விளைவாக எப்பொழுதும் வந்து கொண்டிருப்பது சிவத்தின் செயல். ஆகவே நல்ல செயலையே செய்வேன் என்று ஒவ்வொருவரும் உணர்ந்து மதித்து அந்த உறவு கொண்டு கடமையாற்றி வருவது – அதுவே சிவயோகம், எப்பொழுதுமே சிவயோகம் தான். எந்தப் பொருளிலேயும் அவனைக் காணலாம்.

எந்த நிலையிலேயும் அவனைக் காணலாம். அவனாகவே இருக்கலாம். அவனோடு உறவாக இருக்கலாம் உறைந்து இருக்கலாம். உடலால் வேறுபட்டு இருந்தாலும் உள்ளத்தால் அறிவால் ஒன்றுபட்டு இருப்பதை உணரலாம். இந்த நிலைக்கு அறிவை உயர்த்தவல்லது அறத்தை உணர்த்தவல்லது தவமும் அகத்தாய்வும். அந்த தவமும் அகத்தாய்வும் நீங்கள் பெற்றுவிட்டீர்கள், செய்து கொண்டு வருகிறீர்கள், அதனுடைய பலனை உணர்ந்துகொண்டும் இருக்கிறீர்கள். அதனை ஆழமாக மேலும் ஆழமாகச் சிந்தித்துச் செயல்படுத்தி பயனடையுங்கள். நீங்களும் பயனடைந்து மற்றவர்களுக்கும் அந்தப் பயன் வீசட்டும்.”

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

– தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

* * * * * * * * * * * * * * * * *

 

 

“உலகம், அண்டங்கள், உயிரினங்கள், பொருள்கள்,

பலதும் அணுவின் கூட்டுப் பக்குவப் பரிணாமம்,

பகுத்தறிந்தால், ஒன்றி, ஒன்றிப் பார்ப்பவனே, ஒலி முதலாய்

பஞ்சதத்துவம், ஈர்ப்பு, பரம், அணு இவையாவான்”.

இறையுணர்வில் எழும் பேரின்பம்:

“இன்ப ஊற்று என நிறைந்த இறைவா எனும் போதிலே

ஏற்படும் ஓர் இன்பமதை எவ்வாறு சொல்வேன்

நன்மை தரும் நவ கோள்கள் நட்சத்திரக் கூட்டம்

நான் அகத்தே காணுகின்றேன் நடனமாடும் காட்சியாய்

உன் பெரிய பேரியக்க உவமையற்ற ஆற்றலால்


உலகங்கள் அத்தனையும் உருளுதே ஓர் கொத்துப்போல்

தன்மயமாய்த் தான் அதுவாய்த் தவறிடாதியக்கும் உன்

தன்மையினை எண்ண எண்ண தவமது ஆனந்தமே.”

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

– தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

NEXT      :  ஜூன் 27 : அத்வைதம் த்வைதம்

PREV      :    ஜூன் 25 : அறிவின் முழுமை

நாளொரு நற்சிந்தனை:



Like it? Please Spread the word!