x

ஜூன் 23 : இயற்கையிலேயே தியாகிகள்

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.


இயற்கையிலேயே தியாகிகள் :

“நம் நாட்டின் பண்பாட்டின் படி பார்த்தால் பெண்கள் இயற்கையிலேயே தியாகிகள் என்று சொல்லலாம். ஏன் என்றால் அவர்கள் கணவன் வீட்டுக்கு வரும்போதே தாய், தந்தை, பிறந்த வீட்டுச் சூழ்நிலை எல்லாவற்றையும் துறந்து விட்டுத் தான் வருகின்றார்கள். திருமண வாழ்க்கையைத் தொடங்குவதற்கு முன்பே துறந்து வரக்கூடிய ஒரு இயல்பு அவர்களுக்கு வந்துவிடுகிறது. அந்த அளவுக்குத் துறந்த பிறகு இங்கே அன்பு நாடி வந்த பெண்ணுக்கு ஆதரவு கொடுக்க வேண்டியது அவசியம். சேர்ந்த இடத்திலே இந்த ஒரு பெரிய உண்மையை உணர்ந்து கொள்ள வேண்டியது ஆண் மக்களுடைய கடமையாகும். சாதாரணமாக ஒரு மனைவி என்ற மதிப்பில் மாத்திரம் வேண்டியது அல்ல. பெண்மை என்ற மதிப்பிலே, தாய்மை என்ற மதிப்பிலே எல்லோருக்கும் கொடுக்கக்கூடிய மதிப்பைப் போல நம் வீட்டுக்கு வந்த பெண்ணிற்குக் கூட அந்த மதிப்பு உண்டு என்று பார்த்து நடந்து கொள்ளலாம் அல்லவா?

எல்லாம் சரியாகப் பார்க்கும் போது சாதாரணமாக ஆணுக்கு ஆண் என்ற நட்பிலே ஒரு எல்லை வரையில் தான் இருக்கும். ஆனால் கணவன் மனைவி உறவிலே இருக்கக் கூடிய இந்தப் பண்பாடு, தியாகம் இதைச் சரியாக உணர்ந்து நடப்பீர்களேயானால் அதைவிட ஒரு பெரிய இன்பம் இந்த உலகத்தில் வேறு இருக்க முடியாது. அதை நல்ல முறையில் காப்பாற்றிக் கொள்வதற்கு வாழ்த்தி, வாழ்த்தி அந்த வாழ்த்திலே வளம் காணலாம்.”

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

– தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

* * * * * * * * * * * * * * * *

 

“பெண் வயிற்றிலுருவாகிப் பின்னுமந்தப்

பெண் கொடுத்த பால் உண்டே வளர்ந்து, மேலும்

பெண் துணையால் வாழுகின்ற பெருமை கண்டு,

பெண்மைக்கே பெருமதிப்புத் தந்து உள்ளோம்;

பெண்ணினத்தை எங்கெவரும் எவ்விதத்தும்

பெருமை குன்ற அவமதித்தால் சகிக்க மாட்டோம்;

பெண்மைக்கு நமது கடன் ஆற்ற வாரீர்

பெருந்திரளாய்க் கூடி ஒரு முடிவு செய்வோம்.”

“உத்தமியாள் அறிவுடையாள் பதியாய் என்னை

உவந் தேற்றாளை மணந்து நலமாய் வாழ்ந்தேன்,

பத்து வருடம் போச்சு குழந்தை இல்லை;

பக்தி நிலை அக்காலம் எங்களுக்குப்

புத்திரனில்லா தோர்கள் பாவி என்று

புனைந்த கற்பனைக் கதைகள் படித்ததோடு

நித்தம் அதனைச் சுட்டிக் காட்டி உற்றார்

நிந்திக்கும் சொற்களையும் கேட்டு நொந்தோம்”.

அறிவின் திறனால் உணர்த்திய காதல் :

“உத்தமியாள் அறிவுடையாள் பதியாய்த் தன்னை

உவந்தேற்பாள் ஒருவளைத் தேர்ந்திட வள்ளுவர் –


பித்தனைப்போல் மணல் முடிச்சுடன் திரிந்தார்,

பேரறிவால் வாசுகி யூகித் தறிந்தாள்,

வித்தையெனப் பலர்முன்னே மணல்கைக் கொண்டாள்

வீசியெறிந்தால்; மறைவில் அரிசிச் சாதம்

சித்தம் மகிழ்ந்தே படைத்து சூழ்ந்தோர்க் கெல்லாம்

சிந்தை நிலையறி வித்தாள், என நான் சொன்னேன்.”

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

– தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

NEXT      :  ஜூன் 24 : இயற்கை என்ற சொல்லின் பெருமதிப்பு

PREV      :  ஜூன் 22 : கடமையில் விழிப்புணர்வு

நாளொரு நற்சிந்தனை:



Like it? Please Spread the word!