x

ஜூன் 13 : கால வேகம்

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.


கால வேகம் :

“விருப்பு வெறுப்பு உணர்ச்சிகளில் அதிக வன்மையும், வேகமும் உடைய மனிதன் விலங்குகளைப் போல், காட்டிலும் குகையிலும் வாழ்ந்திருந்த காலம் உண்டு.

நெருப்பைக் கண்டு பிடித்து, அதை உபயோகிக்கக் கற்றபின், வேகவைத்து ஆகாரம் உண்ணக் கற்றுக் கொண்டான். செயற்கையில் ஒளி ஏற்படுத்திக் கொண்டான். நேற்று இன்று நாளை எனக் கடந்த, நிகழ், எதிர், காலங்களை சுட்டிக்காட்டி முன்னேற்றம் அடைந்தான். பொருட்களைச் சேமித்தல், பாதுகாத்தல் என்பனவற்றையும் கற்றுக்கொண்டான்.

இரும்பையும் மின்சாரத்தையும் கண்டுபிடித்த பின் பல துறைகளிலும் வேகமாக முன்னேறி வாழ்வை வளமாக்கிக் கொண்டான். அறிவு மேலும் உயர்ந்து அணுசக்தியைக் கண்டுபிடித்த பின், வாழ்வில் முன்னேறிக் கொண்டே இருக்கும் பாதையில், ஒரு திருப்பம் வந்திருக்கிறது.

அதாவது அவன் அடைந்த முன்னேற்றங்கள் யாவும் பயனற்றே போகும் அளவுக்கு அணுசக்தியைத் தவறாக மனித இன வாழ்விற்குப் பாதகமாக உபயோகிக்க ஆரம்பித்து விட்டதால், மனித இனமே அழிந்து விடக்கூடிய அபாயம் தோன்றிவிட்டது.

இத்தகைய விபரீத விளைவுகளைத் தடுத்து மனித இனத்தைக் காப்பாற்ற எல்லோரும் பெரு முயற்சி கொள்ள வேண்டும்.”

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

– தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

* * * * * * * * * * * * * * * *

 

 

ஆக்கமும் அழிவும் கண்டீர் – அமைதியும் காண்பீர் :

“விஞ்ஞான அறிஞர்களே! நம் குலத்தை

வேரறுக்க, வாழவைக்க, உங்களுக்கு,

எஞ்ஞான்றும், மேன்மேலும் திறமை கூடும்.

இனி நீங்கள் உலகநலப் பொறுப்பை ஏற்று

அஞ்ஞான முடையோர்கள் அறிவில்கூட

அணுநிலையோ டாதிநிலை இரண்டும் காட்டி,

மெய்ஞ்ஞானம் ஊட்டுதற்கு முயலவேண்டும்.

மிகஎளிது உங்களுக்கு இதைச் சாதிக்க.”

விஞ்ஞானத்தால் விளைந்த பயன்:

“ஆறறிவின் ஆரம்ப நிலையில் நின்று

அனுபவித்தாய் அனுபவத்தின் பயனுணர்ந்தாய்;

பேரறிவைப் பெறவேண்டிப் பெருத்த வேகம்

பெரிதென்ற விஞ்ஞானத் துறையிலிட்டாய்.

யாரறிந்த ஒன்றும் இதில் ஞான, கர்ம

இந்திரியங்க்கட்கு உபகருவி யாச்சு

ஊரறிந்தாய் உலகறிந்தாய். உன்னையார் என்று


ஒன்றுமட்டும் அறியவில்லை விஞ்ஞானத்தால்.”

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

– தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

NEXT      :  ஜூன் 14 : முற்றறிவு

PREV      : ஜூன் 12 : உலகை வாழ்த்துவோம்

நாளொரு நற்சிந்தனை:



Like it? Please Spread the word!