x

ஜனவரி 16 : வாழ்த்து

 வாழ்க வையகம் வாழ்க வளமுடன்!!


வாழ்த்து :

வாழ்த்து எல்லா மந்திரங்கட்கும் மேலான திருமந்திரமாகும். ஒருவரை நாம் வாழ்த்தும் போது அந்த உயிருக்கும் நம் உயிருக்கும் ஒரு உயிர்த் தொடர்பு – சங்கிலித் தொடர்பு ஏற்பட்டு வாழ்த்து அதன் மூலம் பாய்ந்து வேலை செய்யும். ஒருவரை நாம் வாழ்த்தும் தகுதியைப் பெறுகிறோம்.

அந்த அளவுக்கு நமது பெருந்தன்மை தானே வளர்ச்சியடைகிறது. இந்த வாழ்த்து பேரறிவில் பதிவாகி அதன் மூலம் அடி மனத்திற்கும் பரவி நாளாக நாளாக நட்புணர்ச்சி வளர உதவும். வெறுப்புணர்ச்சி தானே மறைந்துவிடும்.

ஒற்றுமையின்றி பிணங்கி நிற்கும் ஒரு மகனைத் தந்தை தினசரி வாழ்த்திக் கொண்டே இருப்பாரானால் இருவருக்கும் இடையேயுள்ள உயிர்த் தொடர் மூலம் அவ்வாழ்த்துப் பரவி மகனுடைய மூளையில் பதிந்து அவனைச் சிறுகச் சிறுகத் திருத்தி தகப்பன் விருப்பப்படி நடக்கும்படி செய்துவிடும்.

கணவன் மனைவியிடையேயும் இப்படித்தான். இது நான் அனுபவமாக பல குடும்பங்களில் கண்ட உண்மையாகும். வாழ்த்தின் மூலம் தேவையான நன்மைகளும் கிட்டும்.

ஆதலால்தான் கடவுளைக் கூட வாழ்த்தும் பக்தர்களையும் பக்திப்பாடல்களையும் நாம் பார்க்கிறோம். கடவுளை வாழ்த்துவதன் மூலம் எல்லோரையும் வாழ்த்தும் நற்பழக்கத்தை மனிதன் ஏற்படுத்திக் கொண்டான். இதனால் ‘மனவளம்’ பெருகுவது நிச்சயம்.

“அருட்பேராற்றல் கருணையினால்,
உடல் நலம், நீளாயுள், நிறைசெல்வம்,
உயர்புகழ், மெய்ஞானம் ஓங்கி வாழ்க வளமுடன்”
என்று வாழ்த்தி பயன்பெறுவோம்.

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்..

தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

* * * * * * * * * * * * * * * * * * * * * * * *

 

“உண்ணும் உணவு உடல் மட்டும் பாயும்

எண்ணும் எண்ணங்கள் எங்குமே பாயும்.”

” எண்ணம், சொல், செயலால் எவருக்கும்

எப்பொழுதும் நன்மையே விளைவிக்க

நாட்டமாயிரு”.

உலக நல வாழ்த்து :

“உலகமெலாம் பருவமழை ஒத்தபடி பெய்யட்டும்

உழவரெலாம் தானியத்தை உவப்புடனே பெருக்கட்டும்

பலதொழில்கள் புரிகின்ற பாட்டாளி உயரட்டும்

பகுத்துணர்வில் தொகுத்துணர்வு பண்பாட்டை உயர்த்தட்டும்

கலகங்கள் போட்டிபகை கடந்தாட்சி நடக்கட்டும்

கல்லாமை கடன்வறுமை களங்கங்கள் மறையட்டும்

நலவாழ்வை அளிக்கும் மெய்ஞ்ஞானஒளி வீசட்டும்

நம்கடமை அறவாழ்வின் நாட்டத்தே சிறக்கட்டும்.”


வாழ்க வையகம் வாழ்க வளமுடன்..

– தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.



Like it? Please Spread the word!