x

ஜனவரி 09 : குரு தானாக வருவார்

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்!!


குரு தானாக வருவார்:

நாம் அறிவு வளர்ச்சி பெற்று சிந்திப்பதற்கான ஒரு வாய்ப்பு கிடைக்கின்றவரையிலே இந்த ஐந்து புலன்களிலேயே இயங்கி நாம் எதைப் பார்க்கின்றோமோ அதனுடைய பதிவு அதிலே ஏற்படக்கூடிய இன்ப துன்ப விளைவுகள், அவற்றினுடைய பதிவுகள், அதை ஒட்டி எழும் செயல்கள், அந்தப் பதிவுகள் மீண்டும் மீண்டும், மேலும் மேலும், அந்த வினப்பதிவுகளை ஏற்றுக்கொண்டிருக்கின்றோம்.

ஆகையினால் அந்த மெய்ப்பொருளாக உள்ள ஆதி நிலையானது அறிவுக்குப் பிடிபடவில்லை. நாம் எங்கேயிருந்து வந்தோம், எதற்காகப் பிறந்திருக்கிறோம், எங்கே போக வேண்டும் என்பது நினைவுக்கே வரவில்லை.

சூதாட்டத்தில் இறங்கி விட்ட ஒருவனுக்கு, அந்த மயக்கத்திலே செயல்பட்டுக்கொண்டு இருக்கக் கூடிய ஒருவனுக்கு, எப்படிக் குடும்பத்தைப் பற்றியோ லாப நஷ்டத்தைப் பற்றியோ எண்ணம் வராதோ, அதுபோல் இந்த இன்ப துன்பம் என்ற ஒரு சூதாட்டத்தில் நம்மைப் பற்றிய நினைப்பே எழுவதில்லை.

இந்த இடத்திலே தான் குருவினுடைய பார்வை, குருவினுடைய நினைவு, குருவினுடைய சொல் ஒரு மனிதனுக்குத் தேவையாக இருக்கிறது. இங்கே ஒரு கேள்வி? குரு என்றால் யார்? குரு என்றால் அவர் தன்னை அறிந்தவர். அவருடைய உதவி இவனுக்குக் கிடைப்பதற்கு இங்கே அவன் ஒரு நிமிடமாகிலும் சிந்தித்திருக்க வேண்டும்; தேடி இருக்க வேண்டும்.

“நான் பிறந்து வந்துள்ளேனே, என்னைப் பற்றி எதுவுமே தெரியவில்லையே, தெரிந்து கொள்ள வேண்டும், ” என்று இவனாக நினைத்திருந்தாலும் சரி, அல்லது இவனுடைய பெற்றோர்கள் நினைத்து இருந்தாலும் சரி, அந்த எண்ணம் நிறைவேறாமல் தொடர்ந்து வந்து இருந்தாலும் சரி, அது கட்டாயம் அதற்குரிய ஒரு குருவைத் தேடிக்கொடுத்து விடும்.

வழியிலே இருந்து வந்த ஒரு உருவத்தை குரு என்று சொல்வதை விட, ஒரு மனிதனுடைய கர்மா, அவனுடைய action, அவனுடைய சிந்தனை, அவனுடைய தெளிவு, அவனுடைய அறிவு வேகம் அவனுக்கு உயர்வு நாட்டத்தை கொடுத்து விடுகிறது;

அதுவே குருவையும் கொண்டு வந்து கொடுத்து விடும் காலத்தாலே. அந்த குருவினுடைய பார்வை, சொல் இவைகள் எல்லாம் சாதகனுடைய உள்ளுணர்வைத் தூண்டி விடுகிறது.

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்..

தத்துவ ஞானி வேதாத்திரி மகரிஷி.

**************************************

 

ஞானமும் – முக்தியும் :

“தவபலமும் தனையறிந்த நிலையும் கொண்டு

தனையடைந்தோர்க் கருள்புரியும் தகைமையுள்ள

சிவநிலையோன் மெய்ஞ்ஞானி குருவாய் நின்று

சீடனது புருவமையம் விரலால் தீண்ட ;

அவனிலவன் லயமாகி ஆசான் தொட்ட

அவ்விடத்தே ஞாபகத்தை ஒன்றி ஒன்றி

உவமையிலாப் பேரின்பம் உள்ளுணர்ந்து

ஒருமைத்தத்துவம் அறிந்தால் அதுவே முக்தி.”


தொட்டுக் காட்டல் :

“குருவினது விரல்பட்ட உடனே ஆங்கோர்

குறுகுறுப்பும் சிறு உணர்வும் அறிவிற் கெட்டும்

ஒருமையுடன் உற்றுற்று உணர்ந்து வந்தால்

உள் நாட்டமே உனக்குப் பழக்கமாகும்.

பெருகிவரும் பேரின்ப எல்லை கண்டு

பிறப்பிறப்பு எல்லைக்கு அப்பால் உள்ள

நிருவிகற்ப நிலைகண்டால், எங்கும் என்றும்

நீயனைத்துமாகி நிற்கும் தன்மை காண்பாய்.”

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்..

– தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

NEXT      :  ஜனவரி 10 : சினம் ஒரு சங்கிலி

PREV      :  ஜனவரி 08 : அளவான தேவை

நாளொரு நற்சிந்தனை:



Like it? Please Spread the word!