x

செப்டம்பர் 30 : மிருகம், மனிதன், மாமனிதன்

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்!!
வாழ்க்கை மலர்கள்….
செப்டம்பர்,30….
மிருகம், மனிதன், மாமனிதன்:
புலன்கள் மூலமாகப் பொருட்களைப் பார்ப்பதும், அப்படி நாம் பார்க்கும் போது நமது ஜீவகாந்த சக்தி செலவு ஆவதால் இன்பமோ, துன்பமோ, அமைதியோ, பேரின்பமோ வருவதும், புலன்கள் மூலமாக வரக்கூடிய வாழ்க்கை. உலகியல் வாழ்க்கை. அதற்கு மேலாக உண்மையை உணர்ந்து, இயற்கையை உணர்ந்து, அதற்குத் தக்கவாறு அருள்வாழ்வு வாழ வழி வகுத்துக் கொண்டு வாழக்கூடிய ஒரு பேராற்றலும் மனிதனிடத்தில் இருக்கிறது. ஆனால், மற்ற ஜீவராசிகளிடமும் இந்த அறிவு இல்லையா என்று பார்த்தால் இருக்கிறது. ஆனால் அந்த அறிவைச் செயல்படுத்தக் கூடிய வாய்ப்பே அவற்றுக்கு இல்லை.
பசி எடுத்தால் சாப்பிடவேண்டும். ஆனால், சாப்பாட்டிற்கு உணவு உற்பத்தி செய்ய எந்த ஜீவனாலாவது முடியுமா? உலகத்திலே, மனிதன் ஒருவனுக்குத் தான் தனக்கு வேண்டிய உணவைத் தானே உற்பத்தி செய்து சாப்பிடக்கூடிய திறமை உள்ளது. மற்ற ஜீவன்களுக்கு இல்லை. அவை என்ன செய்கின்றன?
மற்றொரு ஜீவன் தன் வாய்க்குள் போகக் கூடியதாக இருக்க வேண்டும். அதற்கும் மேலாகத் தன்னால் கொன்று அதைச் சாப்பிடக்கூடிய, தன் வலிவுக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும்’ இப்படித்தான் அததற்கு உரிய உணவை எல்லா ஜீவனும் தேடிக் கொள்கின்றன. உலகத்திலுள்ள எந்த ஜீவன் ஆனாலும் சரி, ஓரறிவான மரம், செடி, கொடி தவிர இரண்டாவது அறிவாகத் தோன்றி புழுவிலிருந்து மற்ற பூச்சிகள், பறவைகள், கால்நடைகள் எல்லாமே ஒரு உயிரைக் கொன்று வாழக்கூடியவை தான். ஆனால், அதனாலெல்லாம் அது கொலை செய்கிறது என்று உயிரினங்கள் பேரில் குற்றம் சுமத்த முடியாது. ஏனெனில், அவற்றுக்கு உணவு உற்பத்தி செய்யத் தெரியாது.
ஆனால், அதையே மனிதன் செய்யும்போது குற்றமாகக் கொள்கிறோம். ஏன் என்றால், துன்பத்தைத் தவிர்த்து இன்பமாக வாழ வேண்டும் என்று நம்மால் நினைக்க முடியும். இந்த உணர்வைச் செயல்பாட்டில் கொண்டு வந்தால் அதற்குத் தகுந்தவாறு திட்டமிட்டு வாழக்கூடிய அறிவு மனிதனிடம் இருக்கிறது. இப்போது மனிதனுடைய சிறப்பை உணர்ந்து கொள்கிறோம். இந்தச் சிறப்பை உணர்ந்து யார்க்கும் எவருக்கும் துன்பம் உண்டாகாமல் வாழ்க்கையை அமைத்துக் கொள்வதோடு, இதெல்லாம் தெரியாமல் துன்பத்தில் உழலும் மற்ற மனிதர்களும் அறிவு மேம்பாடு பெற அருள் தொண்டாற்றுவதற்கு அந்தச் சிறந்த மனிதன் முன்வரும்போது மாமனிதனாகிறான்.
* * * * * * * * * * * * * * * * * * * * * * * *
“அறிவின் மதிப்பு குறையாமல் உயிர் போனாலும் சரி
அதை ஏற்றுக்கொள்வோம். அறிவு கெட்டு உயிர் நீடித்து
பயனில்லையென்பது அறிஞர் கண்ட தெளிவு”.
“கடன், வறுமை, கல்வியின்மை என்ற மூன்று
களங்கங்கள் உலகினிலே மறைய வேண்டும்.
உடன்பிறந்தார் போல் உள்ளம் ஒன்றி மக்கள்
உயர்நிலையில் வாழவைக்கும் ஆட்சி வேண்டும்”.
சமாதான முயற்சி :
“ஓர் உலக ஆட்சியினை நிறுவி விட்டால்
யுத்தமே நிரந்தரமாய் நின்று போகும் “நாம்
யார்” என்ற கேள்விக்கு விடையைக் காணும்;
நற்றவத்தால் ஒழுக்கம் அருள் அன்பு ஓங்கும்,
பார் முழுதும் அறியாமை ஏழ்மை போக்க
பல அறிஞர் செல்வந்தர் இணைந்த வாழ்க்கை
சீர்திருத்த சங்கத்தால் மக்கட் கெங்கும்
திட்ட மிட்டுத் தொண்டாற்ற உலகம் உய்யும்”.
“இறப்பதற்கே பிறக்கின்றோம் எனினும் அந்நாள்
எண்ணத்திற்கெட்டு மட்டும் இந்த உண்மை
மறக்காமல் மற்றவர்க்குத் தீங்கு இன்றி
மண்மீது உழைத்துண்டு அன்பாய் வாழ்வோம்”.
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்..
தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.


Like it? Please Spread the word!