x

செப்டம்பர் 29 : ஆக்கினை

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்!!
வாழ்க்கை மலர்கள்….
செப்டம்பர், 29….
ஆக்கினை:
உணர்ச்சிவயப்பட்ட நிலையிலேயே எண்ணிப் பழகிக் கொண்டிருக்கிறோம். அந்த நிலையில், மன அலைகள் வினாடிக்கு 14 முதல் 40 வரை
(14 to 40 cycles per second)
அமைகின்றன. ஆற்றல் முழுவதும் நுணுகி, மனத்தை, மன அலையை, சுழலை அமைதிப்படுத்தும்போது ‘பீட்டா அலை’ (beta wave) என்று சொல்லக்கூடிய உணர்ச்சி நிலையிலிருந்து விடுபட்டு அமைதி நிலைக்கு வந்துவிட முடியும். உதாரணமாக, ஒருவர் ஒரு நிறுவனத்தின் மானேஜராக இருக்கும் பொழுது அவரது அதிகாரம் அந்த நிறுவனம் முழுவதும் வியாபித்திருக்கிறது; அதே நிறுவனத்தில் பணியாற்றும் ஒரு பகுதி – அதிகாரியுடைய அதிகாரம் அந்தப் பகுதியோடு முடிகிறது. அந்தப் பகுதியில் பணியாற்றும் ஒரு எழுத்தரின் பொறுப்பு, அவர் பார்க்கும் கோப்புகளோடு நின்றுவிடுகிறது. அதுபோலவே, நம் மனம் எதை எண்ணிப் பழகி இருக்கிறதோ அந்த அலை நீளத்திலேயே இருக்கும். தியானத்தின் போது அதை விடுத்து எல்லா நிலைகளிலேயும் கொண்டு வந்து நாம் இணைப்புக் கொடுத்துப் பழகிக் கொள்கிறோம். ‘பீட்டா அலை’ (beta wave)யில் இருந்து ‘ஆல்பா அலை’ (alpha wave)க்கு வருகிறோம்; அதாவது உறக்கத்தில் என்ன நிலை வருமோ, அந்த நிலைக்கு வருகிறோம். ஆனால் உறங்காத விழிப்பு நிலையிலேயே இருக்கிறோம். இதைத் தான் ஆக்கினை நிலை என்று தியானப் பயிற்சியிலே சொல்கிறோம்.
உள்ளுணர்ந்து உயிரைக் கவனிக்கிறபொழுது, மனம் ஒரு பொருளாகவோ, வடிவமாகவோ, குணமாகவோ மாறாது. அப்படி ஒடுங்கி ஒடுங்கி மனம் நுணுகிய நிலையில் இருக்கும்; அது வரையிலும் ‘ஆல்பா அலை’ (alpha wave) நிலையிலேயே இருக்கும். உறக்க நிலையிலும் மனம் வடிவம் எடுப்பதில்லை, குணமாக இருப்பதில்லை. அதனால், ‘ஆல்பா அலை’ (alpha wave) உறக்கத்தில் தானாகவே வந்து விடும்.
இத்தகைய அலை நீளத்தை நம்மால் பாதுகாக்க முடியுமானால், நமக்கு எந்த விஷயத்திலும் உணர்ச்சி வயப்பட்ட நிலை வாராது; மிகுந்த பற்றுதலினால், ஆழ்ந்த உணர்ச்சி வயப்படும் நிலை ஏற்படாது.
* * * * * * * * * * * * * * * * * * * * * * * *
குண்டலினி யோகம் :
“அறியாமை, உணர்ச்சிவய மயக்கம், மேலும்
அலட்சியம் மூன்றுமே அறிவின் ஏழ்மை;
அறிவுகுறுகிப் பிறழ்ந்து துன்பம் நல்கும்
அனைத்துச் செயலும் பிறக்கும் உண்மைகாணீர்
அறிவை அயரா விழிப்பில் பழகிக் கொண்டு
அவ்வப்போ தெழும் எண்ணம் ஆய்ந்து தேர்ந்து
அறிவின் ஒளியாய் வாழ ஆற்றல் நல்கும்
அருள் வழியே குண்டலினி யோகம் ஆகும்”.
.
குண்டலினி தீட்சை :
“இனி இந்தச் சங்கடங்கள் எவர்க்கும் வேண்டாம்
எண்ணத்தின் ஓர்மைக்கு ஏற்றதான
தனிச்சிறப்பாம் குண்டலினி தீட்சை உண்டு
தகுதியுளோர் விருப்பமுளோர் அனைவர்கட்கும்
கனிவுடனே கைவிரலால் நெற்றி தொட்டு
கனல் மூட்டிக் கருவெழுப்பிக் கருத்துணர்த்தும்
புனிதமுறையைப் பரப்பஉளம் உவந்தும்
பொறுப் பேற்றும் இருக்கின்றேன் தொடர்பு கொள்வீர்”.
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்..
தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.


Like it? Please Spread the word!