x

செப்டம்பர் 23 : பிரவிர்த்தி – நிவர்த்தி மார்க்கங்கள்

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.
.


பிரவிர்த்தி – நிவர்த்தி மார்க்கங்கள் :
.

“பெரும்பாலோர் வாழ்வில் இன்பம், துன்பம் இந்த இரண்டில் ஒன்றை மாற்றி ஒன்று அனுபவித்து வருகிறோம். இந்த இன்ப துன்பமானது எவ்வாறு உண்டாகிறது என்று ஆராய்ந்தால் இரண்டு விதமான உணர்ச்சிகள் தான் நமக்குத் தெரியும். ஆனால் இன்னொரு உணர்ச்சி இருக்கின்றது. அதற்கு பெயர் அமைதி அல்லது சம உணர்வு என்பது. அமைதியான உணர்விலிருந்து சிறிது ஊக்குவித்தலினால் ஏற்படுகிற உணர்வுதான் இன்பம். இந்த ஊக்குவித்தலினால் அணு அடுக்குச் சிதைவு ஏற்பட்டு உயிர்சக்திக்கு அழிவு ஏற்படுகின்ற காலத்தில் அதுவே துன்பமாக மாறுகிறது. அமைதி நிலையில் (Normal) இருக்கின்ற போது அதைச் ‘சத்துவ குணம்’ என்று கூறுவார்கள். அப்போது மனமானது நல்ல எண்ணத்தோடு தெய்வீக நிலையில் இருக்கிறது. அமைதி நிலையிலிருந்த உணர்வு ஊக்குவிக்கப்பட்டு ஏதோ ஒன்றை அனுபவிக்கும் போது ஏற்படும் இன்பம் இருக்கறதே அதை “ரஜோ குணம்” என்றும் அதற்கு மேலே துன்பப்படுகின்ற அளவுக்கு இயக்கமும், செயலும், வேகமும் உணடாகின்றபோது “தமோ குணம்” என்றும் பிரித்துச் சொல்லப்படுகின்றது.
.


நாம் பெரும்பாலும் இன்ப, துன்பம் என்ற இரண்டையும் உணர்ந்துள்ளோம். ஆனால் அமைதி என்ற ஒரு நிலை உண்டு, அதைத் தெரிந்து கொள்ள வேண்டும். பசி எடுக்கிறது. அது துன்பமாக உணரப்படுகிறது. அந்தப் பசியை உணவினாலே நீக்கிக் கொள்ளுகின்றோமே அது இன்பம். துன்பத்திலிருந்து மீட்டுக் கொள்ளும் ஒரு இதம் இருக்கின்றதல்லவா? அதை இன்பமாகத் தான் கொள்ள வேண்டும். இப்போது பசி நீங்கிவிட்டது. இன்பமும் இல்லை. துன்பமும் இல்லை. அந்த இடத்திலே அமைதி இருக்கிறது. அதுதான் (Normal) அமைதி என்பது. இன்பமும் அற்று, துன்பமும் அற்று அறிவு, மனம், உடல் என்ற நிலையிலே இருப்பதுதான் அமைதி. இந்த அமைதி நிலைக்கு வருகின்றபோது தான் அறிவு தன் நிலை நாடி தன்னோடு தன்னுடைய முழுமையில் இணைகின்றது. அப்படித் தன் நிலையில் நில்லாமல் இருந்தால் முழுமை நிலை, பகுதி நிலை என்று இரண்டு பிரிவாகி அந்த இடத்தில் தான் “தன்முனைப்பு” (Ego) உண்டாகிறது. உணர்ச்சி வயப்பட்ட நிலையில் தான் முனைப்பு உண்டாகின்றது. அங்கு பலவிதமான முரட்டு செயல்களும், நோய்களும், தீச்செயல் பதிவுகளும் உண்டாகின்றன. தன்முனைப்பை மாற்றி வாழ்வோம்.”
.

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

– தத்துவஞானி வேதாத்த்ரி மகரிஷி.
.

* * * * * * * * * * * * * * * *

அகத்தவ மன்றம் :

“தன்முனைப்பு ஒருவரிடம் இருக்குமானால்
சாட்சியுண்டு பேராசை, சினம், பொறாமை,
என்கருத்தும் செயல்களுமே நீதியென்று
எண்ணல், பிறர் வருத்தத்தில் இன்பம்காணல்;
புன்செயலின் புலன் மயக்கில் ஆழ்ந்து ஆழ்ந்து
புகழ்தேட பொருள் பெருக்கச் செயல்கள் செய்வார் ,
வன்மனத்தோடெப் போதும் வெறுப்புணர்த்தும்
வகையில் முகம் கடுத்திருத்தல் இவையே சான்றாம்”.
.

இன்பம் துன்பம் :

“இன்பம் துன்பம் என்பதென்ன? இவையிரண்டும்
எங்கிருந்து தோன்றுகின்ற தெனவாராய்ந்தேன்;
இன்பமே இயற்கையிலே எதிலும் என்றும்
எங்கும் நிறைந்துள்ளது; அனுபோகத்திற்கு
இன்பத்தின் அளவுமுறை மாறும்போது
ஏற்படும் ஓர் பொருத்தமிலா உணர்ச்சியேதான்
இன்பத்தின் மறுபெயராம் துன்ப மாயும்
இரண்டும் அறிவின் அலைகளாயும் கண்டேன்”.
.

– தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி..

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.



Like it? Please Spread the word!