x

செப்டம்பர் 10 : இயற்கைக்கும் அறிவிற்கும் உள்ள உறவு

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.
.


இயற்கைக்கும் அறிவிற்கும் உள்ள உறவு :
.

“ஒடுங்கியும், விரிந்தும், பொருளாகவும், கருத்தாகவும், நன்மையாகவும், தீமையாகவும், இன்பமாகவும், துன்பமாகவும் இயங்கும் அறிவை உடைய மனிதன் எந்த அளவுக்கு எவ்வளவு ஆழ்ந்து இயற்கையை அதன் உண்மைகளை இரகசியங்களை உணர்ந்து கொள்ளுகின்றானோ அந்த அளவிற்கே அவன் வாழ்வில் வெற்றியும் மகிழ்ச்சியும் நிறைவும் அமைதியும் பெறுகிறான்.
.

இயற்கையை அதன் விரிவான இயக்க ஆற்றல்களை, மனிதன் அறியாமலோ அல்லது அறிந்தும் மறந்தோ புலனளவில் குறுகி இயங்கும் போது அறிவு, காலம், தூரம், வேகம், பருமன் என்ற பரிமாணங்களால் கருத்தாகவும், வடிவாகவும் மாற்றம் பெற்று உயர்வு தாழ்வு மனப்பான்மைக்கு உள்ளாகின்றது. இந்த நிலையில் அறிவுக்குத் தன்முனைப்பு (Ego) எனும் சிறுமை நிலை உண்டாகின்றது. இந்த சிறுமை நிலையில் மயக்கம், உணர்ச்சி, பயம், மிரட்சி, விளைவறியா செயல்கள், சிக்கல், கவலை இவை தோன்றிப் பெருகி துன்பமடைகின்றது. இயற்கையோடு விரிந்தும் ஆழ்ந்தும், அதன் பெருமையோடு ஒன்றும் போது விளக்கம், விழிப்பு, அன்பு, கருணை, நிறைவு அமைதி, மகிழ்ச்சி இவை பெற்று அமைதி பெறுகிறது. இங்கு தன்முனைப்பு என்ற திரை விலகி இயற்கை என்ற அருட்பேராற்றளோடு இணைந்து மனிதன் பேரின்பமடைகிறான்.
.


எனவே இயற்கையோடு ஒன்றி உணர்ந்து தெளிந்து விழிப்புடன் வாழ்வதே ஆறாவது அறிவைப் பெற்ற மனிதனின் பிறவி நோக்கமாகும். இந்த நோக்கத்திற்கு ஒப்ப வாழ்வை அமைத்துக் கொள்ள வேண்டும் என்ற உள்ளுணர்வே தெய்வ வழிபாடாக உருவாகியது.
.

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

– தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.
.

* * * * * * * * * * * * * * * * *

மனமே எல்லாம் :

“மனம், அறிவு, ஆதியெனும் மூன்றும் ஒன்றே
மறைகளெல்லாம் விரித்துணர்த்தும் உண்மை ஈதே;
மனம் வடிவாய்க் குணங்களாய் எல்லைகட்டும்
மதிஉயர்ந்த சிறப்பில் இந்த விலங்கை நீக்கி
மனத்தினது ஆதிநிலை யறிய நாடும்;
மனிதனிடம் இச்சிறப்பே பிறவி நோக்கம்
மனம்விரிந்தோ ஒடுங்கியோ தன் முனைப்பு அற்றால்
மறைமுடிவாம் ஆதியாம் மூன்றும் ஒன்றே”.
.

“அறிவதனை பக்தி நெறியில் இணைத்து
ஆழ்ந் தொடுங்கி ஒழுக்கத்தால் உயர்ந்த போது
அறிவாலே மெய்ப் பொருளை உணரவென்ற
ஆர்வத்தோ டறிவறிய வேட்பும் ஓங்க
அறிவுதனை அகத்தவத்தால் நிலைக்கச் செய்தேன்
ஆதிநிலை மெய்ப்பொருளாய் அதன் இயக்கம்
அறிவாக உணர்ந்து விட்டேன். அப்பேரின்ப
அனுபவத்தை உலகோர்க்குத் தூண்டுகின்றேன்”.
.

– தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.



Like it? Please Spread the word!