x

செப்டம்பர் 09 : ஞான நெறி

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.
.


ஞான நெறி:
.

“உயிர் ஆற்றல் கள வழிபாடு அனைத்தும் மனதை ஒருமை நிலைக்குக் கொண்டு வரவும், உயர்த்தவும், வாழ்வில் ஒற்றுமை, ஒழுக்கம், ஈகை, அன்பு இவற்றை வளர்க்கவும் பொதுமக்களுக்கு ஏற்ற உளப்பயிற்சி முறையே ஆகும். பக்தி வழியில் இவையெல்லாம் அவசியமே. பக்திவழியில்லாது போனால் சிறு குழந்தை முதல், சிந்தனை ஆற்றல் பெருகும் வரைக்கும், மனிதன் நல்ல செயல்களிலேயே பழக்கம் பெற, தீய செயல்களிலிருந்து விடுபட வழியில்லை. ஆயினும் பக்தி வழி மூலம் மக்களை சிலர் ஏமாற்றுவதும் அவர்களிடமிருந்து பொருள் சுரண்டுவதும் பெருகிவிட்டதால் இக்காலத்தில் பக்தி வழி பரிகாசத்திற்குட்பட்டுவிட்டது. உண்மையில் பக்தி வழி மூலம் பண்பட்டு ஞான வழிக்கு வருவதுதான் பாதுகாப்பானது, ஏனென்றால் கற்பனைகளாலும், சடங்குகளாலும் தீமை செய்யாதிருக்கவும், நன்மையே செய்யவும் பக்தி வழி உதவியாக இருக்கிறது. வயது உயரும் போது, அறிவு உயரும் போது உண்மை விளக்கம் மனிதன் பெறுகிறான். அப்போது அவனிடமிருக்கும் பழக்கங்கள் அவன் கண்ட விளக்கத்திற்கு ஒத்து இருந்தால் தான் அறிவு முழுமை பெற எளிதாக இருக்கும்.
.


விளக்கம் ஒரு விதமாகவும் பழக்கம் வேறு விதமாகவும் இருந்தால் வாழ்வு பொருத்தமாக அமையாது. மேலும் தீய பழக்கங்கள் இருந்தால் அவற்றை மாற்றிக் கொள்வது கடினம். தீய பழக்கங்களின் விளைவாக உடலில் நோய்கள், மனதில் களங்கம் இவை ஏற்பட்டிருக்கும். இவை அறிவை முழுமை நிலைக்கு உயரவிடாமல் தடுக்கும். எனவே பக்தி வழி அறிவின் துவக்க நிலையில் எவ்வளவு அவசியம் என்பது தெளிவாகின்றது. விஞ்ஞான அறிவு வளர்ச்சி பெற்றுள்ள இக்காலத்தில் ஞான வழி மனிதனுக்கு இன்றியமையாததாகும். சிந்தனை ஆற்றல் பெற்ற அனைவரும் ஞான வழியில் பயின்று, தேறி விளங்கி வாழ்வது தான் பொருத்தமானது.”
.

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

– தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.
.

* * * * * * * * * * * * * * * *

“அறிவை ஏடுகளில் பெறலாம்”
ஞானத்தை தவத்தால் பெறலாம்”.
.

“அறிவு என்பது அறியப்படுவது
ஞானம் என்பது உணரப்படுவது”.
.

“அறியாமை அழிவுக்குத் துணை போகும்.
ஞானம் ஆக்கத்திற்கு அச்சாணியாக இருக்கும்”.
.

“அறிவாளிகள் மதிக்கப்பட வேண்டியவர்கள்.
ஞானியர்கள் துதிக்கப்பட வேண்டியவர்கள்”.
.

இருள் போக்கும் யோகம் :

“அருள் விளக்க மில்லாத குறையில் மக்கள்
அனைத்து நலனும் இழந்த துன்பம் ஏற்று
பொருள் காக்க, பூகாக்க, பொன்னைக்காக்கப்
போரிட்டு மடிகின்றார் அந்தோ! வாழ்வில்
மருள் போக்கி மக்கள் ஒத்துதவி வாழ
மனத்தூய்மை வினைத்தூய்மை பெற்றுள்ளத்தில்
இருள் போக்கும் அகத்தவமும் அகத்தாய்வும் பின்
இனிதளிக்கும் குண்டலினி யோகம் கற்பீர்”.
.

– தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.



Like it? Please Spread the word!