x

ஏப்ரல் 10 : அறிவு, உடல் ஆற்றல்களைப் பயன்படுத்தல்

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.


 

அறிவு, உடல் ஆற்றல்களைப் பயன்படுத்தல் :

“பயங்கரமான வேகம் கொண்டு பாயும் நதியின் வெள்ளத்தை, அணைகள் மூலம் தடுத்து ஒரு தக்க இடத்தில் தேக்கி, அந்தத் தண்ணீரை நமக்கு வேண்டிய இடத்திலும் நமக்கு வேண்டிய அளவிலும் உபயோகித்துப் பயன் பெறுகிறோம். புலன்கள், உடற் கருவிகள், அறிவின் ஆற்றல் என்ற இவற்றில் சிறந்த மனிதர்களின் உடல் பலமும் அறிவின் நுட்பமும் இக்காலத்தில் கவலையில்லாது ஓடிப்பாயும் வெள்ளம் போல் பல்வேறு துறைகளில் அழிவைச் செய்து விடுகிறது. அவைகள் அவ்வாறு செய்யாது, வாழ்க்கைத் துறைகளாகிய மனோ தத்துவம், சுகாதாரம், பொருளாதாரம், அரசியல், விஞ்ஞானம் என்ற ஐந்து துறைகளிலும் நன்றாகப் பயன்படும்படிச் செய்து, அப்பயன்களின் உதவியால் உலக மக்கள் அனைவரையும் நீதி, அன்பு, அமைதி, இன்பம் என்னும் குறிக்கோளுடன் வாழச் செய்ய முயற்சி செய்வோம்.

மனோதத்துவம் என்றால் என்ன?

உடலில் அரூபமாய் நல்லது கெட்டது, இன்பம் துன்பம், உயர்வு தாழ்வு, விருப்பு வெறுப்பு, என்பன உணர்ச்சிகளாய் மனத்திலே எழுகின்றன. அறிவின் பண்பாட்டினால் இவையணைத்தும் கடந்த நடுவு-நிலைமையும், அந்த மனத்திலே தான் ஏற்படுகின்றது.

கடந்தகால, எதிர்கால, சம்பவங்களை யூகித்துப் பார்த்து அறிவின் இயல்பு இருப்பிடம் இயக்கம் என்பனவற்றை நன்றாய் உணர்ந்து, அறிவின் மூலமும் முடிவும் அதன் இயல்பினையும் செவ்வனே உணர்ந்து வளர்த்துப் பயன்படுத்தும் கலை தான் மனோதத்துவம் ஆகும்.”

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

– தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

* * * * * * * * * * * * * * *

 

 

“ஆறாவது அறிவைக் கொண்ட இந்த மனிதனின்

வாழ்வின் நோக்கம், அறிவு முழுமை பெறவேண்டும்”.

“ஞாலத்தை அறிவது விஞ்ஞானம்

மூலத்தை உணர்வது மெய்ஞ்ஞானம்”.

“சிறுகச் சிறுகப் பயின்றால்

சித்திக்கும் உண்மை நெறி”.

அறிவை விளக்கும் அருட்பணி இல்லம் :

“அகத்தவமும் அருட்பணியும் அனைத்து மக்களுக்கும்

அறிவறிய அறம் நிற்க வழிகாட்ட வேண்டி

மிகத்தெளிந்த அறிவோடு மேலும் மேலும் எண்ணி

மென் மனத்தார் ஒத்துழைப்பும் பொருள் வளமும்கொண்டு

இகத்துக்கும் பரத்துக்கும் நேர் வழியைச் சீராய்

எல்லார்க்கும் காட்டும் அருட்தொண்டு இல்லம் கண்டேன்


பகுத்தறிவும் தொகுத்துணர்வும் பண்பாடும் ஓங்க

பலநாட்டு அறிஞர்களும் பயன் விளைக்க வாரீர்”.

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

– தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

NEXT      :  ஏப்ரல் 11 : வாழ்க்கைத் துறைகள்

PREV      :  ஏப்ரல் 09 : துன்பம் இல்லாத நிலை

நாளொரு நற்சிந்தனை:



Like it? Please Spread the word!