x

ஏப்ரல் 08 : அலை இயக்கம்

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்!!
அலை இயக்கம் :
ஒரு வானொலி நிலையத்திலிருந்து ஒரு நிகழ்ச்சியை ஒலிபரப்புகிறார்கள். அது பாடல் என்று வைத்துக் கொள்ளுங்கள். அந்தப் பாடல் வெளியிலே போகும்போது அலையாகத்தான் போகும். அந்த அலையில் அந்தக் கருத்து வாசகம் எல்லாம் அடங்கியிருக்கும். வழியில் இதை யாராவது கண்டு பிடிக்க முடியுமா? முடியாது. இல்லை அலையில் இதையெல்லாம் தெரிந்து கொள்ள முடியுமா? முடியாது.
ஆனால் இங்கே உள்ள கருவியில் மோதும்பொழுது மோதிப் பிரதிபலிக்கும்பொழுது அங்கே எந்தெந்த உச்சரிப்பு எந்தக் கருத்து அங்கே சொன்னார்களோ அவையனைத்தும் வெளிப்படும். இன்னொரு பாடல்; அதை ஒருவர் தாளம் போட்டுப் பாடுகிறார் என்று வைத்துக் கொள்ளுங்கள். அந்தத் தாள ஓசையோடு கேட்கிறது; அதுபோல இன்னும் வேறு பல கருவிகளை வைத்துப் பாடினாலும் கூட அவ்வளவும் இந்த அலையில் போகும். வெறும் பேசும் அலைக்கும் இந்த அலைக்கும் ஒரு வித்தியாசமும் இருக்காது அங்கே.
ஆனால் அது மோதிப் பிரதிபலிக்கக்கூடிய இடத்தில் அத்தனையும் வரும்.
அதேபோல் எந்தப் பொருளும் உலகத்தில் அதன் அதன் இடத்திலிருந்து ஒரு அலை வீசிக் கொண்டேதான் இருக்கிறது. ஏனென்றால் அந்தப் பொருள் எதனால் ஆக்கப்பட்டது என்றால் சக்தியின் துகளினால். ஒவ்வொரு ஆகாசத்துகளும் தன் வேகத்தில் சுழன்று கொண்டேதான் இருக்கிறது. ஆகையினால் அலை வீசிக் கொண்டே தான் இருக்கும்.
எந்த அலைக்கும் மோதுதல், பிரதிபலித்தல், சிதறுதல், ஊடுருவுதல், ஒன்றுடன் ஒன்று திருப்பி திருப்பி இணைந்து பாய்தல் என்று ஐவகையான இயக்கங்கள் உண்டு. எத்தனையோ அலைகளை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அவற்றையெல்லாம் நல்லவையாக ஆக்கிக் கொண்டு நாம் நல்ல அலையை இயக்க வேண்டும்; நலம் செய்து கொண்டே இருக்க வேண்டும்; நன்மையேதான் செய்வேன் என்ற எண்ணத்தை உறுதியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்..
– தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.
* * * * * * * * * * * * * * * * * * * * * * * *
“நின்றிடு அகண்டாகாரம் நிலையினில்
வென்றிடுவாய் புலன் ஐந்தையும்; வெற்றியே”
“ஆன்மீகத்துறையினிலே முன்னேறும் அளவிற்கு
அமைதியும் இன்பமும் உண்டாகும் மனிதனுக்கு”.
“இயற்கை விதியறிந்து ஏற்று மதித்து ஆற்றும்
முயற்சி வெற்றி பெற முழு அமைதி என்றும் இன்பம்”
“வெட்டவெளி சக்தி என்பதில்லையானால்
வேறு எந்தப் பொருள் வலிது பிரபஞ்சத்தில்?
தொட்ட, தொடப்பட்ட இரு பொருட்களூடே
தொட, தொட்டதாய் எண்ணும் அரூபம் யாது?
பட்டப் பகலில் வானில் மீன்கள் தோன்றா
பார்வையில்லார்க்கவை எந்த நாளும் காணா
எட்டவில்லை அறிவிற்கு என்றால், உள்ள
இயற்கைத் தத்துவம் எங்கே ஒளிந்து கொள்ளும்?.”
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்..
– தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.


Like it? Please Spread the word!