x

ஆகஸ்ட் 27 : இயற்கைச் சட்டம்

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்!!


இயற்கைச் சட்டம்:

இயற்கை அமைப்பைத் தெரிந்து கொள்ள வேண்டும். ஒன்றைச் செய்தால் அதற்கு விளைவாகத் தக்க பயன் வரும். அது நிச்சயம். இது இயற்கைச் சட்டம் (It is the Law of Nature). இறைவனுடைய திருவிளையாடலை உணர்ந்து கொள்வோமேயானால், நாம் இரண்டு வகையிலே விழிப்போடு இருந்து பெற வேண்டியதைப் பெறலாம். ஒன்று, இயற்கையின் நியதியை உணர்ந்த மாத்திரத்திலேயே இயற்கையைச் சார்ந்து விடுகிறோம். எல்லா இயக்கங்களும் எல்லா விளைவுகளும் ஒரு நியதிக்கு உட்பட்டுத் தான் நடந்து வருகின்றன என்பதைத் தெரிந்து கொள்கின்ற போது, அந்த நியதிக்கு அடிப்படையாக உள்ள ஒரு பேராற்றலோடு ஒன்றி நிற்கின்றபோது அந்த நியதியை நன்றாக உணர்ந்து கொள்ளக் கூடிய ஒரு மனநிலையும் உண்டாகும். அறிந்து கொள்வது என்பது வேறு. மறவாது இருப்பது என்பது இரண்டாவது. மூன்றாவதாக உணர்ந்ததைச் செயல்படுத்தித் தான் அதனுடைய நலனைப் பெறுவது என்பது. இந்த மூன்று வகையிலே மனிதன் முயற்சி எடுத்தால் அவனுக்கு என்ன வேண்டுமோ, அதை அவனாலே நிச்சயமாகப் பெற முடியும். என்ன பெற முடியாது என்று நினைக்கிறானோ அதை விட்டு விட வேண்டியது தான்.


– தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

* * * * * * * * * * * * * * * * * * * * * * * *

 

தப்புக் கணக்கு :

“தப்புக் கணக்கிட்டுத் தான் ஒன்றை எதிர்பார்த்தால்

ஒப்புமோ இயற்கை விதி; ஒழுங்கமைப்பிற்கொத்தபடி

அப்போதைக் கப்போது அளிக்கும் சரிவிளைவு,

எப்போதும் கவலையுற்று இடர்ப்படுவார் இதை யுணரார்”.

இயற்கையின் பேராற்றல் :

“இயற்கையென்ற பேராட்டக் காரனுக்கு என்றும்

எல்லாச் சீவன்களுமே எடுத்தாடும் காய்கள்

பெயர்த்து இடம் மாற்றி வைப்பான், பிய்த்தெறிவான், அருள்வான்;

பிழையென்று தீர்ப்பளிக்கப் பிறந்தோர் யார் பேருலகில்?”

இயற்கை நீதி :

“ஊழ்வினையாம் கருவமைப்புப் பதிவும் பின்னும்

உருவெடுத்த பின்விளையும் பதிவும் கூடி

வாழ்வினிலே ஒவ்வொருவர் தன்மையாக

வளம்பெற்றுத் தேவை சூழ்நிலைகட் கேற்பத்

தாழ்வு உயர்வு எனும் எண்ணம் செய்கையாகத்

தழைக்கும் புகுவினையென்ற எழுச்சி ஈதே

ஏழ்பிறப்பும் எவ்வினையும் தொடரும் ஒத்து

எழும் அமைதி இன்பதுன்பம் இயற்கை நீதி”.

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்..

– தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.



Like it? Please Spread the word!