x

ஆகஸ்ட் 19 : பழிச்செயல் பதிவு நீக்கம்

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்


பழிச்செயல் பதிவு நீக்கம் :

1) தனக்கோ, பிறர்க்கோ துன்பம் தரும் செயல் யாவும் பழிச் செயலாகும்.

2) மனம், மொழி, செயல் எதுவாயினும் ஒவ்வொன்றுக்கும் உயிரிலும் பதிவுகள் உண்டு.

3) வினைகளின் தன்மைகளுக்கும், விளைவுகளுக்கும் ஏற்ப அவை ஆகாமியம், பிராரப்தம், சஞ்சிதம் என்னும் மூன்றுவித பழிச் செயல் பதிவுகளாக – 1) உறுப்புப் புலன்களிலும், 2) மூளையிலும், 3)வித்திலும் பதிவாகின்றன. இவையனைத்தும் ஆன்மாவின் சூக்குமப் பதிவுகளாகிப் பிறவித் தொடராக மனிதனுக்குத் துன்பங்களை அளிக்கின்றன.

4) விழிப்பு நிலை பெறவும், மனவலிவு பெறவும் ஏற்ற உளப் பயிற்சி ஏற்று எல்லாப் பழிச் செயல்களையும் பிராயச்சித்தம், உணர்ந்து திருந்தி அழித்தல், தெய்வ நிலைத் தெளிவால் முறித்தல் என்ற மூவகையில் போக்கி வினைத் தூய்மையும், மனத் தூய்மையும் பெறலாம்.

5) எந்த பழிச் செயலானாலும் மீண்டும் அத்தகைய செயல்களைச் செய்யாதிருக்கும் வழியில் முடிவு கண்ட பின்னர் தான், மனவலிவு பெற்ற பின்னர் தான் அதை முயற்சியால் பயிற்சியால் முறையாகப் போக்கி நலம் காணலாம் என்பதை நினைவில் இருத்திக் கொள்ள வேண்டும்.


ஆகவே மனவிரிவு, விளக்கம், விழிப்புநிலை என்ற நிலைகளும், கூர்ந்துணர்தல், கிரகித்தல், ஒத்துப் போதல், பெருந்தன்மை, ஆக்கச் செயல்களில் ஈடுபாடு ஆகியவைகளை எந்த அளவுக்கு நாம் வளர்த்துக் கொள்கிறோமோ அந்த அளவுக்குத் தான் மகிழ்ச்சியும் நிறைவும், அமைதியும் பெறலாம்.

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

– தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

* * * * * * * * * * * * * * * * *

அமைதி பெறுவீர் :

“அறிவு என்பதோ களங்கமற்றது

அன்பு ஒன்றே அதன் இயல்பாகும்;

அனுபவம் தேவைகள் என்னும் இரண்டால்

அதுவே குணங்களாய்க் களங்கமுற்றது,

அறிவு அகம் நோக்கித் தன்னிலை கண்டிட

அகன்று போகும் களங்கம். சுயமாகும்

அன்பு தொண்டு அறம் இயல்பாகிவிடும்

அந்த நிலைநாடி அமைதி பெறுவீரே !”

அகத்தவப் பேறு:

“அகத்தவத்தால் “ஆ” லயமாம் சிறந்த வழிபாடு

ஆராய்ச்சி அறிவுடையோர்க் கேற்ற உயிர்ப் பேறு

அகத்தவத்தால் தனையறிந்து பழிச்சுமைகள் போக்கி

அறநெறியில் பிறழாது ஆற்றி வாழலாகும்;

அகத்தவமோ தனையறிந்த ஞான ஆசானின்றி

அறிந்திடவோ பழகிடவோ முயல்வது கூடாது

அகத்தவத்தை மெய்விளக்க மன்றங்கள் மூலம்

அறிந்தெளிதில் பயின்றுபயன் பெற்றுய்ய வாரீர்.”

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

– தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.



Like it? Please Spread the word!