x

ஆகஸ்ட் 16 : நமக்குள் இருக்கும் இரகசியம்

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.


நமக்குள் இருக்கும் இரகசியம் :

“எந்த ஒரு பொருளை உணர்ந்தால், எந்த அறிவைப் பெற்றால் எல்லாவற்றையும் உணர்ந்து கொள்ள முடியுமோ, எல்லாவற்றையும் ஐயமின்றி தெரிந்து கொள்ள முடியுமோ, அந்தப் பொருள்தான் அறிவை அறிந்து கொள்ளக் கூடிய ‘அறிவு’ எனும் பொருள். அது எங்கேயோ இல்லை. நமக்குள்ளாகவே இருக்கிறது. ஒரு சிறிய உதாரணத்தோடு பார்ப்போம்.

ஒரு பெரிய செல்வந்தர் புகைவண்டியில் முதல் வகுப்புப் பெட்டியில் பயணம் செய்வதற்குப் பதிவு செய்து இருந்தார். அவர் நிறையப் பணம் எடுத்துச் செல்வதை அறிந்த மற்றொருவர், அதே நாளில் அதே பெட்டிக்குப் பதிவு செய்து கொண்டார். அந்த நாளில் இருவரும் பயணம் செய்தார்கள். அப்பொழுது பணக்காரர் தன் பையில் இருந்த பணத்தை எடுத்து எண்ணிப் பார்த்தார். எதிரில் இருந்தவர் பணக்காரர் பணம் எண்ணுவதற்குத் தடையாக இருக்கக் கூடாது எல்லாப் பணத்தையும் வெளியில் எடுத்து எண்ணட்டும் என்று பாத்ரூமுக்குள் போய் இருந்து கொண்டார். அதன்பிறகு வந்தார். சிறிது நேரம் கழித்துப் பணக்காரர் பாத்ரூம் போனார்.

அதன் பிறகு சிறிது நேரம் கழித்து வந்தார். மீண்டும் மறுமுறை பணத்தை எடுத்து எண்ணினார். மற்றவர் மீண்டும் உள்ளே போய்விட்டு பிறகு வந்தார். மீண்டும் பணக்காரர் உள்ளே போனார். உடனே வெளியில் இருந்தவர் பணக்காரருடைய பணத்தைப் பெட்டி தலையணை மற்றும் அவர் உடைமைகள் அனைத்திலும் தேடினார். கிடைக்கவேயில்லை. மறுபடியும் பணக்காரர் வெளியே வந்தார். பொழுது விடிகின்ற நேரம் இருவரும் புறப்படும் சமயம்.


மறுபடியும் பணக்காரர் பணத்தை எடுத்து எண்ணிப் பார்த்தார். அதற்கு மற்றவர், “நீங்கள் பணத்தை எங்கே வைத்து இருந்தீர்கள்” என்றார். “ஏன் கேட்கிறீர்கள்?” என்றார் பணக்காரர். நீங்கள் இரு தடவை பணத்தை எண்ணியதைப் பார்த்தேன். உண்மையில் நான் ஒரு திருடன். அதை எடுக்கத்தான் வந்தேன். நீங்கள் உள்ளே போய் இருந்த பொழுது பணத்தைத் தேடிப் பார்த்தேன் கிடைக்க வில்லை” என்றார். “உன்னைப் பற்றிப் எனக்கு நன்றாகத் தெரியும் நீ திருடன் என்று. அதனால் என் தலையணைக்கு அடியில் வைத்தால் ஆபத்து என்று, பணத்தை உன் தலையணைக்குக் கீழே வைத்திருந்தேன்” என்றார் பணக்காரர்.

அதே போல எல்லாம் வல்ல இறைவன் இரகசியமான பொருட்களை நமக்குள்ளேயே வைத்திருக்கிறான்.”

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

– தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

* * * * * * * * * * * * * * *

 

 

மனதின் அடித்தளம் இறை நிலை :

“அலை அலையாய் இயங்கும் மனத்தடித்தளமே நிலை பொருள்

அது தெய்வம் கடல் போன்று, அலை போன்றதே மனம்;

நிலை பொருளாம் இருப்பு சிவம் நித்தியம் என்றோதிடும்

நெடுவெளி உன் அறிவாகும், உனது அலையே மனம்

கலையுணர்வால் மெய்ப் பொருளாம் கண்காணா ஒன்றினைக்

கண் காது மூக்கு குணம் உருவம் புகுத்தியே

சிலையுருவில் காட்டி சொன்ன கதைகளில் மயங்கி நாம்

சிக்கியுள்ளவரை உண்மை நிலை விளங்காதுணருவோம்”.

ஒன்றே பலவும்:

“ஒன்றுமில்லா ஒன்று இருள், பூர்ணம், மௌனம்

உள்ளுணர்ந்து ஒடுங்கி நிற்கும் நிலையைப் போன்று

ஒன்றுமில்லா ஒன்றுக்கு ஆதியில்லை

ஒலி, வெளிச்சம், இயக்கம் அணு அதன் பூரிப்பு

ஒன்றுமில்லா ஒன்று இந்த நாலானாலும்

ஒன்றைவிட்டு ஒன்று பிரியாத தாகும்

ஒன்றுமில்லா ஒன்றின் இரகசியத்தைக் கண்டால்

உண்டுஎன்பது இல்லை என்பது இரண்டும் ஒக்கும்”.

இயல்பும் – உயர்வும்:

“அறிவை உணர்ச்சி வெல்லுவது இயல்பு,

அறிவால் உணர்ச்சியை வெல்லுவது உயர்வு”.

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

– தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.



Like it? Please Spread the word!