x

ஆகஸ்ட் 11 : மூலம் ஒன்றே

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.


மூலம் ஒன்றே :

“முதன் முதலில் மனித இனத்திற்கு தெய்வம் என்ற மதிப்பில் இருந்தது உணவு தான். பிறகு உணவு நிலத்திலிருந்து தான் விளைகின்றது என்றறிந்தபோது நிலத்தைத் தெய்வமாக மதித்தான், வணங்கினான். பிறகு நீர் இன்றி உணவுமில்லை வாழ்வுமில்லை என்று கண்டபோது நீரையும் தெய்வமாக கருதினான். பின்னர் தான் நெருப்பின் மதிப்பும் அதை அலையாக வீசும் சூரியனையும் மதிக்கத் தொடங்கினான். மேலும் பல்லாயிரம் தலைமுறைகள் சென்ற பின்னர் காற்றின் மதிப்பை உணர்ந்தான். காற்றையும் தெய்வமாக வணங்கினான். காற்றில் மூலத்துகளாக விளங்கும் விண்ணை உணர பல இலட்சம் தலைமுறைகள் சென்றுவிட்டன.

சிந்திக்கச் சிந்திக்க அறிவு நுண்மை அடைந்தது. மறை பொருள் உணர்நிலைக்கு அறிவு உயர்ந்தது. தோற்றங்கள் அனைத்தும் விண்ணின் கூட்டுதான் என்ற தெளிவு வந்த போது விண்ணைவிட பேரியக்க மண்டலத்தில் வேறு என்ன உள்ளது என்ற சிந்தனையில் எல்லையற்ற இறைவெளி அவன் அறிவுக்கு எட்டியது. வெளியிலிருந்து விண் தோன்றி இருக்குமா? அல்லது விண்ணிலிருந்து வெளி தோன்றியிருக்குமா? என்ற சிந்தனையில் வெளியிலிருந்து தான் விண் தோன்றியிருக்க முடியும் என்ற முடிவுக்கு வந்தான்.


இந்த அறிவு நிலைக்கு வருவதற்குள் இந்த நில உலகில் எத்தனையோ மாற்றங்கள் மனித வாழ்வில் நிகழ்ந்து விட்டன. முடிவாகக் கண்ட தெளிவு இறைவெளிதான் தெய்வம். அது அரூபமானது. எங்கும் நிறைந்தது. அதிலிருந்து தான் விண் முதல் அனைத்தும் தோன்றி அந்த இறைவெளியிலேயே மிதந்து இயங்கிக் கொண்டிருக்கின்றன. உலகில் வாழும் எல்லோரும் ஒரே மூலத்திலிருந்து வந்தவர்கள் தான் என்ற கருத்து பரவியது.”

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

– தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

* * * * * * * * * * * * * * *

 

 

சிறு வயதில் கொண்ட பக்தி:

“கடவுள்தான் அனைத்தையுமே படைத்தான் என்றேன்

கண்காது மூக்குவைத்துக் கதைகள் சொன்னேன்

கடவுள் என்று கற்சிலையை அறையில் வைத்துக்

கதவு அடைத்துப் பூட்டியும் வைத்தேன்; பின் அந்தக்

கடவுளுக்குப் பசிதீர்க்க பால் நெய் தேங்காய்

கனிவகைகள் கற்சிலைமுன் படைத்தேன் ஆனால்

கடவுள் நிலை அறிந்தபோதென் செய்கை யெல்லாம்

கண்டு விட்டேன் சிறுபிள்ளை விளையாட்டாக.”

உய்யும் வழி:

“தவமுறையும் அற நெறியும் பற்றப் பற்றத்

தறுக் கென்ற தன் முனைப்புக் குன்றிப்போகும்,

பலவினைகள் புதிது எழா; முன்னம்செய்த

பதிவுகளும் மறைந்து மெய்ப்பொருளும் காணும்;

சிவ நிலையை சீவனிலே உணர்ந்து கொண்டால்

சிறுமை தரும் மனமயக்க மாயை ஏது?

எவரெனினும் இவ்வழியாலன்றி உய்ய

ஏது வழி வேறுலகில் எண்ணிப்பாரீர்.”

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

– தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.



Like it? Please Spread the word!