x

ஆகஸ்ட் 08 : அறிஞர்களின் வழிமுறைகள்

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.


அறிஞர்களின் வழிமுறைகள் :

“எண்ணத்தையும் உடலியக்கத்தையும் ஒழுங்குபடுத்த அறிஞர்கள் பல வழி முறைகளைக் கண்டு அதை மக்களிடம் பழக்கத்தில் கொண்டு வந்தார்கள். பிற்காலத்தில் அவ்வப்போது தோன்றிய அறிஞர்கள் மேலும் மேலும் இந்த ஒழுங்கு முறைகளைத் திருத்தி வந்தார்கள். உலகில் மக்கள் வாழும் தேசங்களின் வெப்ப, தட்ப நிலை, விளை பொருட்கள், அவ்வப்போது அவர்கள் பெற்று வந்த அறிவின் வளர்ச்சி இவைகளுக்கு ஏற்ப அறிஞர்கள் மக்களைப் பண்படுத்த வகுத்த நெறிமுறைகள் காலத்திற்கு காலம், இடத்திற்கு இடம் சிறிது வித்தியாசப்படலாம். எனினும் மனிதர்களின் உடல் இயக்கத் தேவைகள், அறிவின் இயல்பு, இயற்கை அமைப்பு, இன்ப துன்ப உணர்ச்சிகள் அனைத்தையும் அறிந்தே அவர்கள் வாழ்க்கை நெறிகளைப் போதித்து உள்ளார்கள்.

பெரும்பாலான மனிதர்கள் உலகில் மனோதத்துவக் கலையிலும் விஞ்ஞான கலையிலும் தேர்ச்சி பெற்றபின் மனிதர்கள் அறியாமையால் கொண்டிருக்கும் கற்பனைகள் அனைத்தும் நீங்கி அனைவரும் அன்போடும், பண்போடும், அறத்தோடும் வாழ்வார்கள். அக்காலம் சமீபத்தே வருகின்றது. அதுவரையில் வணக்க முறைகள் மனிதனை பண்படுத்துவதற்கு மிகவும் அவசியமாகும்.


ஆறாம் நிலையாக இயங்கும் அறிவுக்கு இயற்கைத் தத்துவத்தை அறிந்து கொண்டே போகும் விஞ்ஞான ஆராய்ச்சியும், தெய்வ வணக்கம் என்ற முறைகளும் தான் அமைதி கொடுப்பவை, பக்தி மார்க்கத்திலே அறிவை மயக்கும், வாழ்வில் துன்பங்களைக் கொடுக்கும் சில பழக்க வழக்கங்கள் உலகெங்கும் மக்களிடையே பரவி இருக்கின்றன. விஞ்ஞான அறிவின் வளர்ச்சி வேகம் அதிகரித்து வரும் இந்நாளில் கல்வியறிவை அனைவரும் பெறும் அளவுக்கு வசதி கிட்டும்போது அத்தகைய தீய பழக்க வழக்கங்கள் படிப்படியாகக் குறைந்து பின் அடியோடு ஒழிந்து போகும்.”

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

– தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

* * * * * * * * * * * * * * * *

முழுமையும் அமைதியும் :

“அறிவுஆறாம் நிலையை எய்த பின்னர்

அதுமுழுமை பெற்றுத் தனையறியும் மட்டும்

அறிவிற்கு அமைதிகிட்டா; அவ்வப்போது

அதுதேவை, பழக்கம், சூழ்நிலைகட் கொப்ப

அறிவேதான் காம முதல் ஆறுகுணங்கள்

ஆகிவிளைவாய் இன்பதுன்பம் துய்த்து

அறிவுதான் மூலநிலை நோக்கி நிற்கும்,

அதன்பிறகே முழுமைபெறும் அமைதி உண்டாம்”.

அறிவோடு விழிப்பாயிரு :

“ஒன்றி புள்ளியாய் ஒடுங்கி நீ இரு,

அன்றி விரிந்திடில் ஆராய்ச்சியோடிரு ,

நின்றிடு அகண்டாகார நிலையினில்,

வென்றிடுவாய் புலன் ஐந்தையும் வெற்றியே”.

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

– தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.



Like it? Please Spread the word!