x

ஆகஸ்ட் 02 : ஆசையின் மயக்கம்

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.


ஆசையின் மயக்கம் :

“தேவையைக் காரணமாகக் கொண்டு எழுந்த ஆசை தேவை நிறைவோடு நின்றுவிட வேண்டும். பசி தாகம் முதலிய இயற்கைத் துன்பத்தைப் போக்கிக் கொள்ள எழுந்த ஆசை துன்பத்தைப் போக்குவதோடு நின்றாக வேண்டும். உயிராற்றல் செலவைச் சரி செய்ய எழுந்த ஆசை அப்படிச் சரி செய்வதோடு நின்றாக வேண்டும். ஆனால் பொதுவாக அப்படி நிற்பதில்லை.

ஆசையின் மயக்க நிலை :
தேவை நிறைவின் போது ஏற்பட்ட திருப்தியின் மீது அல்லது இன்பத்தின் மீது உயிர் மயங்கிவிடுகிறது. எந்தக் காரியம் இன்பத்தைத் தந்ததோ, அந்தக் காரியத்தைத் தேவையில்லாமலே செய்ய விழைகிறது. அதாவது உண்மையான தேவை இல்லாமலேயே ஆசை எழுகிறது. எழுகிற துன்பத்தைத் தீர்க்கும் வகையில் ஆசை தோன்றியது போக, இன்பத்தைச் செயற்கையாகத் தேடும் முயற்சியிலே இப்போது ஆசை எழுகிறது. இந்த ஆசையைத் தான் கட்டுப்படுத்த வேண்டும். எழாமலேயே காக்கவும் வேண்டும்.

உயிராற்றல் குறைவை நிறைவு செய்வதற்காக அல்லாமல், இயற்கைத் துன்பத்தைத் தீர்ப்பதற்காக அல்லாமல்,உண்மையான உயர்வான தேவையின் காரணமாக அல்லாமல் ஏற்படும் ஆசைகளெல்லாம் அறிவின் மயக்கத்தால் தோன்றுவன. அவை துன்பத்தைத்தான் தரும்.


இன்னொன்று, தகுந்த காரணத்தாலேயே ஏற்பட்ட இச்சைகளானாலும், அவ்வாசைகளை நிறைவு செய்யும் முயற்சியில் தனக்கோ பிறர்க்கோ துன்பம் தோன்றுமானால், அவ்வாசைகளும் தடுக்கப்பட வேண்டியவையே. மேலும், நிறைவேறிய பின்னர் தீய விளைவுகளைத் தரக்கூடிய இச்சைகளையும் கட்டுப்படுத்தித் தான் ஆக வேண்டும்.”

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

– தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

* * * * * * * * * * * * * * *

 

 

“இச்சையே ஒரு நாடக மன்றம் போல்

இச்சையே அதில் எண்ணற்ற நடிகரும்

இச்சையே அதைப் பார்ப்போர் ரசிப்போராம்

இச்சையே அதன் நிர்வாகி உடையவன்”.

“இச்சை எழும்போதே காரணம் கண்டிடு

இச்சை முடிந்திடச் சூழ்நிலை பார்த்திடு

இச்சைமுடிந்தால் எழும் விளைவை யூகி

இச்சை முறையாய் இயங்கும் அமைதியில்”.

இச்சை யார்? நீ யார் இரண்டா? ஒன்றா? சொல்லு!

இச்சை எங்கே? நீ எங்கே? எதோ பிரி!

இச்சையாக இருக்கிறாய் நீயேதான்

இச்சை வேறொன்று எண்ணி மிரள்கிறாய்!”.

அகத்தவப் பேறு:

“அகத்தவத்தால் “ஆ” லயமாம் சிறந்த வழிபாடு

ஆராய்ச்சி அறிவுடையோர்க் கேற்ற உயிர்ப் பேறு

அகத்தவத்தால் தனையறிந்து பழிச்சுமைகள் போக்கி

அறநெறியில் பிறழாது ஆற்றி வாழலாகும்;

அகத்தவமோ தனையறிந்த ஞான ஆசானின்றி

அறிந்திடவோ பழகிடவோ முயல்வது கூடாது

அகத்தவத்தை மெய்விளக்க மன்றங்கள் மூலம்

அறிந்தெளிதில் பயின்றுபயன் பெற்றுய்ய வாரீர்.”

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

– தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.



Like it? Please Spread the word!