x

அக்டோபர் 31 : சத்சங்கம்

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்!!
வாழ்க்கை மலர்கள்….
அக்டோபர், 31….
சத்சங்கம் :
உங்கள் உள்ளங்களை விரித்து உலக நிலைமையை நோக்குங்கள். தனிமனிதன் வாழ்வில் படும் அல்லல்களையும் துன்பங்களையும் கூர்ந்து உணருங்கள். இவற்றிற்கு காரணம் என்ன? இயற்கையில் எந்தக் குறையுமில்லை. மனிதன் அறிவில் மயக்கமும் செயல்களில் தவறும் வாழ்வில் பல்வேறுபட்ட சிக்கல்களாக வடிவங்கொண்டுள்ளன.
பொருள் துறையில் ஏற்றத்தாழ்வு, தனது ஆற்றலை உணராமலும் அதனைப் பெருக்கிக் கொள்ளாமலும் பிறரிடமிருந்தே எப்போதும் தன் விருப்பத்திற்கும் தேவைக்கும் நிறைவு பெற எதிர்பார்த்தல், இவற்றால் பொறாமை, புறங்கூறல், நல்லவையே செய்பவர்களிடம் கூடக் களங்கம் கற்பித்து மகிழ்தல், பிறர் கடமைகளில் குறுக்கிடல், தனது பெருமையை வளர்த்துக் கொள்ளப் பிறர் செயலை இழித்துக் கூறல், பிறர் பொருள் இன்பம் பறித்துத் தான் மகிழ நினைத்தல், இவையெல்லாம் தடுக்கமுடியாத அளவில் சமுதாயத்தில் பெருகிக் கொண்டிருக்கின்றன. இந்தச் சூழ்நிலையில் தான் நாம் அனைவரும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இந்நிலை மாறிச் சமுதாயம் தூய்மையும், வளமும், அமைதியும் பெற வேண்டுமென விரும்புகிறோம். இந்த நன்னோக்கமுடையோர் ஒன்றிணையும் கூட்டமே சத்சங்கங்கள்.
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்..
தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.
**************************************
“அவ்வப்போது அன்பர்கட்கு சொல்லுகிறேன் எழுதுகிறேன்
துயர்களைய தூய்மைபெற நலம் காண்பீரே – மகரிஷி.”
காலத்திற்கேற்ற வாழ்க்கைநெறி :
“எந்த எந்தக் காலத்தோ வாழ்ந்திருந்த
இறையறிஞர் சிந்தித்தார்கள்,
இயற்கையாய் அன்றுவரை வளர்ந்த
பண்பாடொப்ப மக்களுக்கு
அந்த அந்தக் காலத்துத் தேவை சூழ்நிலை
அறிவுக்கிசைந்த வாறு
அப்போது ஏற்றபடி வாழ்க்கை முறை வகுத்தார்கள்
சொன்னார்கள் கருணை கொண்டு;
இந்த விந்தை மிகுகாலம் விஞ்ஞான அறிவுக்கு
எல்லாம் ஒவ்வா
என்பதனால் இக்கால நிலைக்கேற்ப
வாழ்க்கைமுறை விளக்குகின்றேன்
சொந்த சின்தனையொட்டி வாழ்வாராய்ந்து
அவ்வப்போது அன்பர்கட்கு
சொல்லுகிறேன் எழுதுகிறேன் துயர்களைய
தூய்மைபெற நலம் காண்பீரே”.
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்..
தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.


Like it? Please Spread the word!