x

அக்டோபர் 05 : விடுதலைக்கான வழி

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்!!
வாழ்க்கை மலர்கள்….
அக்டோபர். 05….
விடுதலைக்கான வழி :
சூரிய ஒளியினால் சூடு பெற்றுக் கடலிலிருந்து ஆவியாக மாறி மேகமாகி அது குளிர்ந்து மழையாக எந்த இடத்தில் மழையாகப் பெய்தாலும் அந்த நீர், தனக்குப் பிறப்பிடமாகிய கடலை நாடியே ஓடுவது போல, இறைநிலையிலிருந்து புறப்பட்டு பல தலைமுறைகளாக சீவன்களில் இயங்கி, மனிதனிடம் இறுதியாக வந்து இயங்கிக் கொண்டிருக்கும் சிற்றறிவு, முற்றறிவான இறைவனை நாடியே அலைகின்றது. அத்தகைய வளர்ச்சி நிலையில் உடல் தேவைக்கான பொருள், புலன் இன்பம் இவற்றில் ஈடுபடுகிறது. இங்குதான் அறிவானது தான் போக வேண்டிய இடத்தை மறந்து, அடித்தடுத்து தொடர்பு கொண்ட பொருட்கள், மக்கள், புலன் இன்பம் இவற்றோடு தொடர்பும், மேலும் பொருள்களும் இன்பமும் எளிதாக மேலும் மேலும் உழைக்காமலே கிடைக்கக்கூடிய வழிகளாகிய அதிகாரம், புகழ் இவற்றின் மீது நிறைவு பெறாத அவாவையும் பெருக்கிக் கொள்கிறது.
எவ்வளவு தான் பொருளோ புலன் இன்பமோ, புகழோ, அதிகாரமோ அமைந்தாலும் இன்னும் வேண்டும், இன்னும் உயர்வாக வேண்டும் என்ற உணர்ச்சி வயமான மன அலையில் இயங்குகிறது. இதனால் அளவு மீறியும், முறை மாறியும் ஞானேந்திரியங்களையும் கர்மேந்திரியங்களையும் பயன்படுத்த அவைகள் பழுதுபட்டு உடல் துன்பம், மன அமைதியின்மை, செயல் திறமிழத்தல், இதனால் சமுதாயத்தில் மதிப்பிழத்தல் ஆகிய குறைபாடுகளோடு வருந்திக் கொண்டே இருக்க வேண்டியதாகிறது. மெய்யுணர்வு பெற்ற குருவழியால் அறம் பயின்று இறைநிலை விளக்கமும் பெறும் போதுதான் தடம் மாறிய மன ஓட்டம் நேர்மையான இயக்கத்திற்கு வரும். துன்பத் தொடரிலிருந்து விடுதலை கிடைக்கும்; வேறு எந்த வழியும் மனிதன் உணர்வதற்கு இல்லை.
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்..
தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.
* * * * * * * * * * * * * * * * * * * * * * * *
“ஆசை முறைகெட்டுப் போனால் பேராசை
முறைப்படுத்தப்பட்ட ஆசை நிறைமனம்”.
எண்ணம் :
“ஒவ்வொருவருடைய எண்ணம் தான் வாழ்வின் சிறப்பாக உள்ளது”.
“நிறைவு பெறாமல் இருக்கும் ஆசைகளின் கூட்டம்’
நெஞ்சம், மனம், பேச்சுஇடைப் பிணக்காகும் பொய்கள்;
மறைமுகமாய் நேர்முகமாய் பிறர் உளம் வருத்தல்,
மற்ற உயிர் சுதந்திரமும் வாழ்வின் வளம் பறித்தல்;
நிறைவழிக்கும் பொறாமை, சினம், வஞ்சம் காத்தல், மேலும்
நெறிபிறழ்ந்த உணவு, உழைப்பு, உறக்கம், உடலுறவு,
கறைபடுத்தும் எண்ணம் இவை கருமையம்தன்னைக்
களங்கப்படுத்திவிடும் கருத்தொடு சீர்செய்வோம்”.
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்..
தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.


Like it? Please Spread the word!